அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை புகையிரத திணைக்களமும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து சேகரித்த ஒருதொகுதி உலருணவு பொருட்கள் இன்று புகையிரதம் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு எடுத்துவரப்பட்டது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உலருணவு பொருட்கள் புகையிரதத்தில் கொண்டுவரப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலார் திரு இ.ரமேஸ், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டு பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
பொருட்களை பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உற்றுப்பினர் டக்ளஸ் தேவானந்த இது நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த முயற்சி என தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த புகையிரதம் இன்று கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்த உலருணவுப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
தவசீலன், செம்பியன்
No comments:
Post a Comment