மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தினால் நீரில் தாழ்ந்த பழைய லக்கலை நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய லக்கலை நகரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஜரட்ட மக்களுக்காக கண்ட கனவை நிறைவேற்றி, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாகவே அம்மக்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.
மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த 3,000 குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றி, களுகங்கை நீர்த்தேக்கத்தின் காரணமாக நீரில் தாழ்ந்த லக்கலை நகரத்திற்குப் பதிலாக களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக புதிய லக்கலை நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு நவீன நகர எண்ணக்கருவான பூங்கா நகர எண்ணக்கருவிற்கேற்ப இந்த நகரம் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கான முழுமையான முதலீடு 4500 மில்லியன் ரூபாவாகும்.
நகரத்தின் முழு நிலப்பிரதேசம் 75 ஹெக்டெயார் பரப்பை கொண்டுள்ளதுடன், புதிய பொலிஸ் நிலையம், முகாமைத்துவ அலுவலகம், கூட்டுறவு கட்டிடத் தொகுதி, பிரதேச சபைக் கட்டிடம், பிரதேச செயலாளர் அலுவலகம், 3 புதிய மகா வித்தியாலயங்கள், 2 கனிஷ்ட வித்தியாலயங்கள், புதிய வைத்தியசாலை கட்டிடத்தொகுதி, புதிய சுகாதார மத்திய நிலையம், பொது விளையாட்டரங்கு, வனப் பாதுகாப்பு திணைக்கள அலுவலகம், மக்கள் சந்தை, பொதுச் சந்தை தொகுதி, பஸ் தரிப்பிடம், புதிய தபால் அலுவலகம் மற்றும் புதிய வங்கி, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 அரச நிறுவனங்கள், புதிய லக்கலை நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரச நிறுவனங்களுக்காக 112 கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றுக்கு மாத்திரம் 2043 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், கிராமிய வீதிகளை விரிவுபடுத்தல் மற்றும் பிரதேசத்தில் உள்ள அபிவிருத்தி வாய்ப்புக்களை இனங்கண்டு நகரத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கழிவகற்றும் நடவடிக்கைகள் பேராதனை பல்கலைக்கழகத்தின் உதவியுடன் புதிய முறைமையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
லக்கலை புதிய நகரம் தம்புள்ளை, மாத்தளை, நாவுல, மொரகஹகந்த, பல்லெகம, வஸ்கமுவ, தேசிய பூங்காக்களின் ஊடாக கிராந்துருக்கோட்டை, மஹியங்கனை பிரதான வீதியுடன் தொடர்புபடுவதுடன், தம்புள்ளை நகரத்திற்கு நேரடியாக தொடர்புபடும் பிரதான வீதி முறைமையின் காரணமாக அரச மற்றும் தனியார்துறை முதலீடுகள் இப்பிரதேசத்திற்கு கிடைக்கவுள்ளது.
மேலும் ஏற்கனவே இருந்த போக்குவரத்து கஷ்டங்கள் காரணமாக மாத்தளை நகரிலிருந்து லக்கலை நகரம் வரையில் பயணம் செய்வதற்கு நான்கரை மணித்தியாலம் தேவைப்பட்டது. புதிய நகரத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீதி முறைமையின் காரணமாக இதற்காக செலவாகும் நேரம் ஒன்றரை மணி நேரமாக குறைவடைந்துள்ளது.
நகர நிர்மாணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட காணி பிரதேச மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். புதிய நகர திட்டமிடலின்போது இயற்கை வளங்களிலிருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்ளும் வகையிலும் சனத்தொகையை மையப்படுத்தியதாகவும் மேற்படி விடயம் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இயற்கை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் இச்சூழல் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தினால் காணிகளை இழந்த மக்களுக்கு அதிக நட்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த விடயத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி செயற்பட்டதுடன், இதற்காக வழங்கப்பட்ட நட்டஈடு 11,000 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும். சொத்துக்களுக்கான நட்டஈட்டிற்கு மேலதிகமாக இம்மக்கள் மீளக்குடியேறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் வீட்டுத்தோட்ட காணியும், ஒன்றரை ஏக்கர் வயல் காணியும் இத்திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலத்தில் இந்நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் இல்லாத பல வசதிகளை புதிய லக்கலை நகரம் கொண்டிருப்பதுடன், பழைய லக்கலை நகரத்தை பார்க்கிலும் 100க்கு 500 மடங்கு முன்னேற்றமானதென பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் வருடத்தில் ஒருபோகம் மட்டுமே பயிர்ச் செய்ய முடிமாக இருந்த மக்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்தின் மூலம் எவ்வித கஷ்டங்களுமின்றி பயிர்ச் செய்யக் கிடைத்திருப்பதுடன், தமது வாழ்க்கை இந்த புதிய குடியேற்றத்தின் மூலம் புதிய மாற்றத்திற்கு உட்பட்டிருப்பதாகவும் மருந்தை பெற்றுக்கொள்வதற்கு வைத்தியசாலை ஒன்றுகூட இல்லாதிருந்த நிலையில் இன்று அனைத்து வசதிகளும் உள்ள இலத்திரனியல் வங்கி வசதிகளும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ஊடக பிரிவு
No comments:
Post a Comment