நெல் சந்தைப்படுத்தல் சபையின் “PMB Rice” விற்பனை நாமத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அரிசி சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதுடன், அப்பணிகள் நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களிலுள்ள 220 களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லினை தரமான அரிசியாக மாற்றி அதனை நாடளாவிய ரீதியில் நுகர்வோருக்கு வழங்குவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வழிகாட்டலின் கீழ் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அரிசி சந்தைப்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், “நூறு வீத தேசிய உற்பத்தி” என்ற தொனிப்பொருளின் கீழ் சந்தைப்படுத்தப்படும் இந்த அரிசி உற்பத்தி சந்தையில் அரிசி விலையினை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் அமைகின்றது.
மேலும் இதனூடாக நுகர்வோருக்கு குறைந்த விலையில் சிறந்த அரிசியை பெற்றுக்கொள்ளவும் விவசாயிகளுக்கு தமது நெல்லுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் அமைகின்றது.
எதிர்காலத்தில் விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் நலன்புரி சங்கங்களினூடாக நுகர்வோருக்கு “PMB Rice” அரிசியை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் அரிசி தேவைக்கமைய நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை சந்தைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், விவசாயத் துறை அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment