தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் போக்குவரத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
ஒரு வருடத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்வதோடு ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொள்வதால் அவர்களின் பயணத்தை இலகுபடுத்துவதற்கும், 100 கிலோவுக்கும் அதிகமான பொதிகளை தம்மோடு எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இந்த கப்பல் போக்குவரத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று முன்தினம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயப்ப யாத்திரை குழுவினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
மேலும் அமைச்சர் இங்கு குறிப்பிடுகையில், முதலில் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்தாலும், அத்துடன் சாதாரண பொதுமக்களும், வர்த்தகர்களும் இந்தியாவுக்கான தமது பயணத்தை இலகுவாகவும், குறைவான செலவுடனும் மேற்கொள்வதற்கு வசதியாக இந்தக் கப்பல் சேவை செயற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
அவ்வாறு கப்பல் சேவை நிரந்தரமாக முன்னெடுக்கப்படும்போது, இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை மக்கள் தமது உடமைகளுடன், பொதிகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுக்காமல் இலகுவாக தாயகம் திரும்புவதற்குமான வாய்ப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பின்போது இந்தமத அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் திரு.உமாமகேஸ்வரன் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment