குத்பாப் பிரசங்கங்களை சுருக்கி, தொழுகையை நீட்டிக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களின் கதீப்மார்களையும், நிர்வாகிகளையும் கேட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக், இது தொடர்பில் நாட்டின் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெரும்பாலான பள்ளிவாசல்களில் நண்பகல் 1.30 மணியையும் கடந்து ஜும்ஆப் பிரசங்கங்கள் நடைபெறுவதாக, உலமா சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஜும்ஆத் தொழுகைக்காக, குறுகிய நேர விடுமுறைகளைப் பெற்றுவரும் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்கள், பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
கதீப்மார்கள் குத்பாவைச் சுருக்கி, தொழுகையை நீட்டிக்கொள்வதே, சன்மார்க்கத்துக்கான சிறந்த அடையாளமாகும். குத்பாப் பிரசங்கங்கள் நீண்ட நேரம் இடம்பெறுவதால், வயதானவர்கள் உள்ளிட்ட நோயாளர்கள் பலரும், பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக குத்பாப் பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறும், உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக், அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.ஏ.காதிர் கான்
No comments:
Post a Comment