தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எட்டப்படும் இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 03 ஆம் திகதி தனக்கு அறியத் தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளிகளின் சம்பள உயர்வு தொடர்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலை (29) விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இச்சந்திப்பில் தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனத்தினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தோட்டத் தொழிலாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு நீண்ட நாள் போராட்டத்துக்குப் பின்னரும் இதுவரை கிடைக்கவில்லையென பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தோட்டத் தொழிற்சங்கத்தினர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.
தோட்டத் தொழிலாளர்கள் கேட்கும் சம்பள உயர்வை வழங்க முடியாமலிருப்பதாகவும் தொழிற்சாலைகளை இழுத்து மூடும் நிலை தமக்கு ஏற்பட்டிருப்பதாகவும் முதலாளிமார் பிரதமரிடம் தெரிவித்தனர்.
இருதரப்பும் முன்வைத்த கோரிக்கைகளை செவிமடுத்த பிரதமர், இப்பேச்சுவார்த்தையின் இழுத்தடிப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு உகந்ததல்ல என்பதனால் வெகுவிரைவில் இறுதித் தீர்மானத்துக்கு வருமாறும் கூறினார்.
மேலும் தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வந்துள்ள சம்பள உயர்வு தொடர்பிலும் விரைவில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருமாறும் அதனை தனக்கு அறிவிக்குமாறும் பிரதமர் இருதரப் பினருக்கும் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் முதலாளிமார் சம்மேனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment