இந்திய தேசத்தின் பாதுகாப்பு தமிழர் தேச விடுதலையில் தங்கி இருக்கின்றது - சி.சிவமோகன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 28, 2018

இந்திய தேசத்தின் பாதுகாப்பு தமிழர் தேச விடுதலையில் தங்கி இருக்கின்றது - சி.சிவமோகன் எம்.பி

இந்திய நாடு என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தமிழர்களின் வாழ்வுரிமை பிரதேசம் என்றும் தமிழர்கனின் கையில் இருக்கவேண்டும் என்பது தான் யதார்த்தம். இதனை இந்திய அரசு மறந்துவிட்டது என்று தான் நான் நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

விமானத்தாக்குதலில் 1990 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் 28ம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, எமது ஈழவிடுதலைப் போராட்டம் 2009 மே மாதம் 18ம் திகதி முடிவுக்கு வந்தபோது, விடுதலைப்புலிகள் தற்காலிகமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அவ்வாறு எமது ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு முடிவிற்கு வந்தபொழுதும் கூட இலங்கை இராணுவம் தங்களது அராஜகத்தினை வெளிக்காட்டிய நாளாக அன்றைய நாள் இருந்தது.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ பாதிரியாருடன் வந்த 150க்கும் மேல் சரணடைந்தவர்கள் அவர்களது உறவுகளுக்கு முன்னாலேயே கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இராணுவத் தாக்குதலுக்கு அஞ்சி காடுகளுக்குள் சென்றவர்கள் சுட்டுக்குள் கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்கள் பெரியவர்கள், சிறியவர்கள் எனப் பாராது அநாகரிகமற்ற முறையில் உடைகளை களைந்து சோதனைக்கு உட்படுத்தி பல கொடூரங்கள் அரங்கேறிய நாள் மே மாதம்.

2009 இல் இருந்து 2015 வரையான மஹிந்த ராஜபக்ஷ அவர்களது ஆட்சியில் பல கொடூரங்களை இந்த மண் கண்டது. எமது மக்கள் வீடுகளுக்குள் இருந்தவேளை அரச இராணுவப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு, வெள்ளைவானில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. 

ஒமந்தை தடைமுகாம், ஆனையிறவு தடைமுகாம் என்பவற்றின் மூலம் எமது மக்கள் சுதந்திரமாகச் சென்று வர முடியாமல் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கூட விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இவை அனைத்தினையும் 2015 இல் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் மூலம் நாம் மாற்றி அமைத்தோம்.

2003ம் ஆண்டு மாவீரர் தின உரையிலே தலைவர் பல விடயங்களைத் தெளிவுபடுத்தி இருந்தார். சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பிரதமராக ரணில் அவர்களே இருந்தார். இன்று நாட்டில் ஏற்பட்ட நிலை போல் அன்றும் ஒரு அதிகாரப் போட்டி நிலவியது. 

திடீர் என ரணிலின் அதிகாரத்தினை பறித்தார் சந்திரிக்கா அம்மையார். ரணில் அவர்கள் சமாதான உடன்படிக்கையை கடைப்பிடிக்க, விடுதலைப் புலிகள் பலம் படைத்துவிடுவார்கள் எனவும், ரணில் விடுதலைப் புலிகளுக்கு பரிவு காட்டி வருவதாகவும் இதனால் தான் ஆட்சியைக் கலைத்ததாகவும் அன்று கூறியிருந்தார்.
ஆனால் அன்று ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. இன்று மைத்திரிபால சிறிசேனவிடம் அந்த அதிகாரம் இல்லை. அது 19வது திருத்தச்சட்டமூலம் பறிக்கப்பட்டிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் இன்றி ஆட்சி நடத்துவதாகக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இல்லாத அதிகாரத்தினை பயன்படுத்தி இந்த ஆட்சியை உருக்குலைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், சந்திரிகா அம்மையாரின் அன்றைய ஆட்சி கவிழ்ப்பிற்கான காரணத்தினைபோலவே தானும் செய்வதாக நினைத்துக் கொண்டுள்ளார் போலும். தமிழர்களுக்கான அரசியலமைப்பு மாற்றி அமைக்கப்பட இருந்த காலப் பகுதியிலேயே இவர் இவ்வாறு ஆட்சியினை கலைத்துள்ளார்.

அன்று பல இடைக்கால தீர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதற்கு எமது மேதகு தலைவர் பிரபாகரன் தனது 2003ம் ஆண்டு உரையிலே தெளிவாக குறிப்பிட்டார்.

அதாவது ‘இது எமக்கான தீர்வு அல்ல, நாம் இந்த இடைக்கால அலகுகளினைக்கூட நிராகரிக்கின்றோம் என கூறி, வெளியிலே அவர்கள் பிரச்சாரம் செய்து எமக்கு எதிராக செயல்படுவதை தடுப்பதற்காகத்தான் நாங்கள் அதனை ஏற்றுக்கொன்டோமே தவிர, எமது மனப்பூர்வமாக ஏற்கவில்லை.’ என அன்றே தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தான் இன்றும் கொண்டுவரப்பட்ட அரசியல் மாற்றம் எமக்கு எதுவும் கிடைக்காது என தெரிந்தும் நாங்கள் இறுதிவரை பயணித்தோம்.

அதற்கான காரணமும் இதுவே தான். நாம் நாமாக குழப்பியதாக அவர்கள் கூக்குரலிட்டு வெளிநாட்டிற்கு பயணிக்க முயற்சித்த விடயத்தினை நாங்கள் தடை செய்தோம். இன்று அவர்களாகவே குழப்பியிருக்கின்றார்கள். எந்த காலத்திலும் சிங்கள தேசத்தின் குணம் மாறப்போவதில்லை என்பதை சர்வதேசம் அறிந்திருக்கும்.

உங்களின் கண் முன்னால் நடக்கும் இவற்றிக்குப் பின்னரும் நீங்கள் எங்கள் மக்களுக்காக வரப்போகின்றீர்களா? இல்லையா? எனக் கேட்டுகொள்கின்றோம்.

இந்திய நாடு என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தமிழர்களின் வாழ்வுரிமை பிரதேசம் என்றும் தமிழர்கனின் கையில் இருக்கவேண்டும் என்பது தான் யதார்த்தம். இதனை இந்திய அரசு மறந்துவிட்டது என்று தான் நான் நினைக்கின்றேன்.

விடுதலைப்புலிகளின் கைகளில் தமிழீழம் இருந்த வரை இந்திய ஏகாதிபத்தியத்திற்கு பாதுகாப்பாகத்தான் இருந்தது. இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு நாடும் செயற்படவில்லை. ஆனால் சிங்கள தேசத்தின் கையில் முற்றிலும் ஆட்சி சென்ற பின் மிகவும் சுலபமாக இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை நாட்டிற்குள் புகுந்துவிட்டன. அவர்கள் தமிழர் தேசத்தினைக் கூட ஊடறுத்து வந்து கொண்டிருக்கின்றார்கள். இது இந்தியாவிற்கு பாதுகாப்பானதாக அமையாது.

இதை கருத்தில்கொண்டு தமிழர்களின் போராட்டத்தில் இந்திய தேசம் நடுநிலை பாராமல் நேரடியாக செயற்படுமாகவிருந்தால் அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கும். இந்திய தேசத்தின் பாதுகாப்பு தமிழர் தேச விடுதலையில் தான் தங்கி இருக்கின்றது. – என்றார்.

No comments:

Post a Comment