பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகை ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கூட்டம் நடத்தும் இடமாக மாற்றப்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க விமர்சித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருப்பது சட்டத்துக்கு முரணானது என்றும், பிரதமரின் செயலாளரின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் ரணில் விக்கிரமசிங்கவும் அலரி மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறினார்.
பிரதமரின் செயலாளரின் செலவீனங்களைத் தடுப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இன்று (29) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமரின் செயலாளரின் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதாயின், முன்னாள் பிரதமர் அலரி மாளிகையில் இருக்க முடியாது. நேற்றையதினம் அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அழைத்துக் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கான மின்சாரக் கட்டணம், மண்டபக் கட்டணம் போன்றவற்றை யார் செலுத்துவது?
அலரி மாளிகை தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயமாக மாறியுள்ளது. அப்படியான கூட்டங்களை நடத்துவதாயின் சிறிகொத்தவில் நடத்த வேண்டும். பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருக்கும் நிலையில் அதன் செலவீனங்களை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரச சொத்துக்கள் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்படும் நிலைமை காணப்படுகிறது. நாட்டு மக்கள் இரண்டு பிரதமர், இரண்டு தொகுதி அமைச்சர்களின் செலவீனங்கள் என பாரிய செலவீனங்களை சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment