நாடாளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சபா நாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 13ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் 14, 15, 16 ஆகிய திகதிகளில் கூடிய போதிலும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்ப நிலைகளை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment