காணாமல் போனோர் தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு எந்தவித மேல்முறையீட்டு விண்ணப்பங்களும் கிடைக்கப்பெறவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

காணாமல் போனோர் தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு எந்தவித மேல்முறையீட்டு விண்ணப்பங்களும் கிடைக்கப்பெறவில்லை

காணாமல் போனோர் தொடர்பில் அவர்களது உறவினர் சார்பில் இதுவரையில் தகவல்களை அறியும் ஆணைக்குழுவிற்கு மேல்முறையீட்டு தொடர்பில் எந்தவித விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க தெரிவித்தார். 

தகவல்களை அறிந்து கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு உரிய பிரிவினரால் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மேல்முறையீட்டுக்காக விண்ணப்பிக்கும் உரிமையின் கீழ் ஆணைக்குழுவிற்கு மேல்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது வழமை. 

மேல்முறையீடுகள் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்கள் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இணையத்தள ஊடகவியலாளர்களுக்காக தகவல்களை அறிந்தகொள்ளும் உரிமை குறித்து நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் அவர் கலந்துகொணடார். இந்த நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இங்கு உரையாற்றுகையில், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான மேல்முறையீட்டில் 970 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இவற்றில் 690 விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன. 

இதுவரையில் 652 விண்ணப்பங்கள் தொடர்பில் விசாரணைகள் முடிவு பெற்றுள்ளன. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் 14ஆவது பிரிவின் கீழே மேன்முறையீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 

எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள பெரும்பாலான விண்ணப்பங்களில் காணிப்பிரச்சனை, பிரஜைகள் எதிர்நோக்கும் பிச்சனைகள், கடன் பிரச்சனைகள் தொடர்பாகவே விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. முக்கியமான அபிவிருத்திகள் தொடர்பிலான எந்தவித விண்ணப்பங்களும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை கேட்டிருந்தார்கள். இது ஜனாதிபதி செயலகத்திடம் இல்லை என்று எமக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் இருக்க வேண்டும். அங்கும் நாம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் ஒன்று இருந்ததாக அறிந்தோம். அப்போதைய ஜனாதிபதி அதன் பிரதியை பொலிஸ் மா அதிபருக்கும், தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திற்கும், அரசாங்க அச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் கைச்சாத்திட்டிருந்தார்.

எமது நடவடிக்கை மூலம் பொலிஸ் மா அதிபரிடமிருந்து இதன் பிரதியை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட நபருக்கு அதனை வழங்கியதாகவும்' ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது, தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தில் கீழ் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்த ஊடகவியலாளர் தரிது ஜயவர்த்தனவும் இங்கு உரையாற்றினார்.

அவர் தனது உரையில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சுட்டுக் கொள்ளப்பட்டமை தொடர்பாக தமது ஆய்வுக்கட்டுரைக்கு விபரங்களை திரட்டும் வகையில் தகவல் அறியும் சட்டத்திற்கு விண்ணப்பித்தமை தொடர்பில் விளக்கமளித்தார்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி இந்த மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றது. மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும். மாணவர்கள் விபத்தில் இறந்தாகவும் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிள் சென்றதினால் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த உண்மையை தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புலனாய்வு செய்தித்தேடலில் ஈடுபட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்ததையும் கண்டறியப்பட்ட விடயம் தொடர்பிலும் அவர் மேலும் விபரித்தார்.

இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன, தகவல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க, தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி, தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி யு.பி.எல்.டி பத்திரண, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளர் (திட்டமிடல்) ஜே.டபிள்யு.எஸ் கித்சிறி ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment