ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களுக்கான வீட்டு திட்டம் விரைவில் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
திங்கள்கிழமை காலை (05) கிண்ணியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரமதாசவால் நாடு முழுவதும் மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அவரால் இந்த குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட நூறாவது மாதிரிக்கிராமம் அண்மையில் திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.
அந்த வரிசையில் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்குமான வீட்டு திட்டம் ஒன்றை விரைவில் அமைச்சரின் தலைமையில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
மகிந்தவின் ஆட்சிக்கும் எமது ஆட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இதனை கொண்டு மக்கள் அறிந்துகொள்ள முடியும். மஹிந்தவின் அரசில் இந்த அமைச்சை பொறுப்பேற்றிருந்த விமல் வீரவம்சவால் இதே போன்று எத்தனை கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளது என யாராவது கூற முடியுமா?
அவரின் ஆதரவாளர்களுக்கு அரச வாகனங்களை பெற்றுக்கொடுக்கவும் தனது மனைவியை போலி கடவுசீட்டில் வெளி நாடு அனுப்பவுமே அவர் இந்த அமைச்சை பயன்படுத்தினார். இவ்வாறு அமைச்சின் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த ஊழல் அமைச்சர்களே இன்று நல்லாட்சியை விமர்சிக்கின்றனர்.
எதிர்வரும் சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகணசபை தேர்தலில் திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக திறமையான பலரை களமிறக்க எண்ணியுள்ளோம். அவர்களின் விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
No comments:
Post a Comment