சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை சம்பந்தன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 5, 2018

சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி பிரியாவிடை பெற்றுச் செல்லும் தூதுவர் அதுல் கேஷாப்வர்கள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை இன்று (5) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பில் கருத்து தெரிவித்த இராசம்பந்தன் அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அதேவேளை இலங்கை மக்களின் நலனை அடிப்படையாக் கொண்ட சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசு பூரணமாக நிறைவேற்றாமல் இருப்பதாகவும் எடுத்துக்கூறினார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மிகதாமதமாக ஸ்தாபிக்கப்பட்டதனையும் நஷ்டஈடு தொடர்பான சட்டமூலம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளமையையும் பொறுப்புக்கூறல் தொடர்பில் எவ்வித நடைமுறைகளும் அதாவது உண்மையைக் கண்டறிதல் நீதி, நல்லிணக்கம், மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்வதற்கான ஆணைக்குழு இன்னமும் ஸ்தாபிக்கப்படாமல் உள்ளமையையும் எடுத்துக்காட்டிய அதேவேளை புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் ஒரு நல்ல ஆரம்பத்தினை காட்டியபோதும் தற்போது அதனை முன்னெடுத்துச் செல்வதில் தேவையற்ற தடைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக அநேககருமங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தற்போது நிலவும் இந்த தாமதங்களுக்கான நியாயபூர்வமான எந்தவொரு காரணத்தினையும் என்னால் இனங்காண முடியாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எமது மிகப்பிரதானமான நோக்கம் நாட்டு நலன் பற்றியதேயாகும் ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுகின்ற போது இந்த நாட்டில் உள்ள அனைவரும் நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பொன்றினை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது கடினமான விடயமல்ல என்பதனையும் இரா. சம்பந்தன் அவர்கள் எடுத்துக்காட்டினார்

வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் பிரிபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டுக்குளேயே தீர்வொன்றினை எதிர்பார்க்கிறார்கள் எவ்வாறெனினும் எண்ணிக்கையில் பெருமளவில்லாத குரலெழுப்பும் சிலர் ஒரு தீவிரமான போக்கினை கடைப்பிடிக்கிறார்கள் அப்படியானவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்கள் சமூகத்திலே கொண்டு வரக்கூடிய எதிர்மறையான விளைவுகளையும் தடுப்பதற்குமுள்ள ஒரே வழிமுறை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதேயாகும் எனவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
எமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை அரசாங்கம் இவற்றினை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தமிழ் மக்கள் ஒருபோதும் இந்நாட்டில் இரண்டாந்தர குடிமக்களாக வாழமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐக்கிய அமெரிக்காவை பொறுத்த வரையில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேரணையானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இரு நாட்டினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையாதொன்று எனவும் தெரிவித்தார்.

மற்றும் நிலையான சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு நாட்டின் குறிக்கோள்கள் சாதகமானவையாக காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச அரங்கில் இலங்கை பெற்றுள்ள நன்மதிப்பினை அலட்சியமாக எடுத்து விடக்கூடாது என்றும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்றபோது இலங்கை அரசாங்கமானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அடைய முடியும் என்றும் தெரிவித்தார். 
மேலும் ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்று தெரிவித்த அதேவேளை தனது காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வழங்கிய அனைத்து ஒத்துழைப்பிற்காகவும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அவரது சகபணியாளர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியோரின் அனைத்து பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரோடு கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் இந்தசந்திப்பில் கலந்துகொண்டிருந்த அதேவேளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதானி ரொபேர்ட் ஹில்டன் அவர்களும் அரசியல் பிரிவிற்கான உத்தியோகத்தர் ஜோயன்னபிரிசெட் அவர்களும்கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment