யுத்தத்திற்கு முன்னர் எமது முன்னைய தலைவர்கள் இருந்த பொழுது எவ்வாறு எங்களுடைய சிறார்கள் மற்றும் பெண்கள் நடத்தப்பட்டார்கள் அவர்களுக்கு இருந்த பாதுகாப்பு எவ்வளவு என்பதை நாம் அனைவரும் அறிவோம் என வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பாடசாலை மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று (3) காலை 10 மணியளவில் மன்னார் முருங்கனில் அமைதி பேரணி இடம் பெற்றது.
மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் முருங்கன் வைத்தியசாலைக்கு முன் குறித்த பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து முருங்கன் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கினர். குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று முருங்கன் பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து, அங்கு கண்டன உரைகள் இடம் பெற்றதோடு ஏற்பாட்டுக் குழுவினரினால் கோரிக்கை அடங்கிய மகஜர் உரிய தரப்பினருக்கு கையளிக்கும் வகையில் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த கண்டன பேரணியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், ´மாணவச் செல்வங்களை நாளைய தலைவர்கள், தலைவிகளாக நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு எம் எல்லோரிடமும் இருக்கின்றது.
குறிப்பாக பொது அமைப்பினர், பெற்றோர்கள் இவ்விடயங்களில் விழிப்புனர்டன் இல்லை என்றால் இன்னும் எத்தனையோ சிறார்களை நாம் பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
யுத்தத்திற்கு முன்னர் எமது முன்னைய தலைவர்கள் இருந்த பொழுது எவ்வாறு எங்களுடைய சிறார்கள் மற்றும் பெண்கள் நடத்தப்பட்டார்கள், அவர்களுக்கு இருந்த பாதுகாப்பு எவ்வளவு என்பது அனைவரும் அறிவோம். அனால் அந்த பாதுகாப்பு இன்று இல்லை.
தற்போதைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர் கேடுகளும், எங்களுடைய சிறுவர்களின் மரணமும் நிகழ்வதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் உள்ள எங்களுடைய உறவுகள் தங்களுடைய சகோதரர்களுக்கும் உறவுகளுக்கும் தேவைக்கு அதிகமாக பணம் அனுப்புகின்றார்கள்.
அவ்வாறான சம்பவங்களே இன்றைய கால கட்டத்தில் குறித்த பிரச்சினைகளுக்க ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. கலாச்சாரத்தை சர்வதேசத்திற்கே எடுத்துக்காட்டிய வட மாகாணம் அதுவும் யாழ் மாவட்டம் இன்று கலாச்சார சீரழிவின் உச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றமாகிச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன். கடந்த காலங்களில் குற்றச் செயல்கள் இடம் பெறாமல் இருந்ததுக்கு தண்டனைகள் அதிகமாக இருந்தவையே காரணம்.
ஆகவே நியாயமான தண்டணைகளுக்கு அப்பால் குற்றாளிகளின் குற்றம் நிரூபிக்கப்படுமாக இருந்தால் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். நீதித்துரை சுதந்திரமாக இயங்க வேண்டும்.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்கப்படுமாக இருந்தால் எமது பிள்ளைகளை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவ்வாறான சம்பவங்களுக்கு விரைவாக தீர்ப்பினை வழங்க வேண்டும்.
காலம் நீடித்து இழுத்தடிப்பு செய்யும் சந்தர்ப்பத்தில் இன்னும் எத்தனையோ சிறுவர்களையும், பெண்களையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment