எதிர்க்கட்சித்தலைவரின் பொறுப்பற்ற, சிறு பிள்ளைத்தனமான கருத்தைக்கண்டிக்கிறேன் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் ஸிறாஜி தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் ஐயாவின் அண்மையை முஸ்லிம் எதிர்ப்புக்கருத்து தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக்காலமாக திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலையில் ஏற்பட்டிருக்கும் முஸ்லிம்களின் ஹபாயா தொடர்பான பிரச்சினை தேசிய ரீதியில் சகலரினதும் கவனத்தை ஈர்த்திருப்பது யாவருமறிந்ததே. இனப்பற்றுள்ள, சமூக உணர்வு கொண்ட அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட மதச்சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக குரலெழுப்பிக்கொண்டு வருவதை நான் வரவேற்கிறேன்.
அதே நேரம், இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் பொறுப்பற்ற விதமாக “குறித்த பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் பெண் ஆசிரியைகள் பாடசாலையில் பேணி வருகின்ற கலாசாரத்தைப்பேணி சாரியை அணிந்து செல்ல வேண்டும்” எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
இக்கருத்தானது, சிறு பிள்ளைத்தனமானதும், யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் உரிமையைத் தெளிவாக மறுப்பதாகவும் உள்ளதென்பதை கெளரவ சம்பந்தன் ஐயா ஏன் மறந்தார் எனப்புரியவில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் என்ற பொறுப்புள்ள பதவியை வகிக்கும் ஐயா அவர்கள், சிறுபான்மை இனங்களின் உரிமைகள் மீறப்படும் போது, அதற்காக குரல் கொடுக்க வேண்டியவராவார். இவ்வாறான பொறுப்புமிக்க பதவியிலிருந்து கொண்டு இன்னொரு இனத்தின், யாப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமையை அராசாங்கத்தின் ஆளுகையிலுள்ள தேசிய பாடசாலையில் நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சம்பந்தன் ஐயாவின் இக்கருத்தானது முஸ்லிம்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் செயற்பாடாகவே என்னால் பார்க்க முடிகின்றது. இணைந்த வட கிழக்கில் நீங்கள் எவ்வாறு எமது முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துவீர்கள் என்பதை கண்ணத்தில் அறைந்தால் போல் சொல்லித்தந்து விட்டீர்கள்.
சம்பந்தன் ஐயா அவர்களே!. நீங்கள் சொன்னது போன்று இந்துக்கல்லூரியில் அதன் காலாசாரத்தைபி பின்பற்றி சாரியை அணிந்து தான் முஸ்லிம் பெண் ஆசிரியைகள் செல்ல வேண்டுமெனின், முஸ்லிம் தேசிய பாடசாலைகளில் முஸ்லிம்களின் கலாசாரத்தைப்பேணி தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
சிறுபான்மைச் சமூகத்தின் தலைமை எவ்வாறிருக்க வேண்டுமென்பதற்கு உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத்தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள். 1995ம் ஆண்டு ரூபவாஹிணிக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பவர் தமது மத அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாதென கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது, தமிழ் பெண்கள் பொட்டு வைத்து செய்தி வாசிக்க முடியாத நிலையேற்பட்டது.
உங்கள் சமூகத்தின் உரிமை பறிக்கப்பட்ட போது, நீங்களெல்லாம் மெளனிகளாக இருந்த வேளை, உங்கள் இனத்தவர் பொட்டு வைத்துக்கொண்டு செய்தி வாசிக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்.
அன்று எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பொட்டு வைத்தல் தானே என்று, எமது சமூகத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தமென யோசிக்காமல் சிறுபான்மையினத்தின் உரிமை என்று தான் தூரநோக்குடன் சிந்தித்தார்.
சம்பந்தன் ஐயா அவர்களே, சிறுபான்மையினர் விடயத்தில் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதை பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது காலத்தின் தேவையெனக் கருதுகின்றேன்.
இனி வருங்காலங்களில் பொறுப்பான எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவர்களின் தனித்துவமான விடயங்களில் தூரநோக்கற்று கருத்துக்களை மறுபரிசீலனை செய்யாமல் வெளியிடுவதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் வளர்க்கப் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் ஸிறாஜி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment