அரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றை தடுப்பதற்கும் அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்குமான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் மோசடி என்பவற்றிற்கு எதிராக எதுவித பேதங்கள் இன்றியும் எந்தவொரு நபருக்கும் சலுகை அளிக்கப்படாமலும் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (05) முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல சேவைகள் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி கூறியதாவது, ஜனாதிபதி செயலகத்தின் செயலணி பிரதானி என்ற பதவி அமைச்சின் செயலாளர் பதவிக்கு ஒப்பானது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். எமது நாட்டில் மூன்று ஜனாதிபதிகளுக்காக இந்தப் பதவியிலிருந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் கைது செய்யப்பட்ட அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலணி பிரதானியாவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலணிப் பிரதானி சில மாதங்களுக்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட எனது அலுவலகத்தின் செயலணி பிரதானி சேவையில் இணைந்து ஒரு மாதம் கூட பூர்த்தியாகவில்லை. இதுவே உண்மை நிலைமை. ஏன் இவ்வாறு இடம்பெறுகின்றது? மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் ஒருபோதும் செயற்படலாகாது.
அமைச்சராகவிருந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இந்த மூன்றரை வருடங்களிலும் நான் மிகவும் தெளிவாக இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு, அரச சொத்தை முறைகேடாக பயன்படுத்தல் தொடர்பில் பாகுபாடின்றி தீர்மானங்களை மேற்கொண்டுள்ளேன்.
இந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய விடயங்கள் தொடர்பிலும் நான் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளேன். மத்திய வங்கி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உரியவாறு முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போன்று ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஊழலை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளேன். அந்த ஆணைக்குழுவும் நாளை மறுதினமளவில் மிக முக்கிய தகவல்களை நாட்டிற்கு வெளியிடும்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எமது சுகாதார சேவையிலிருந்து இலஞ்சம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இதன்போது மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, எமது நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
குடும்ப நல சேவை உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடையும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
நாட்டின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் விசேட சேவையை பாராட்டி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் குடும்ப நல சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி இதன்போது நினைவுப் பரிசில்கiள் வழங்கினார்.
சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பாராட்டி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஜனாதிபதிக்கு விசேட பரிசில் வழங்கினார். சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்க உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment