காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஜின்னா வீதியில் வசிக்கும் இந்த சகோதரியின் தந்தை 2016ம் ஆண்டு மௌத்தாஹி விட்டார். இக்குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகளாகும் அதில் மூத்த பிள்ளையும் விஷேட தேவையுடையவர் அவர் திருமணம் செய்து விட்டார்.
மிகவும் வறிய குடும்பமான இக் குடும்பத்தில் தனது வறுமைக்கு மத்தியிலும் இந்த சகோதரி கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்றார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய இந்த சகோதரிக்கு வவுனியாவிலுள்ள தேசிய கல்விக்கல்லூரிக்கு கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 20ம் திகதி இச் சகோதரியை அக் கல்லூரிக்கு வருமாறு கடிதம் வந்தது. ஆனால் தனது குடும்பத்தின் வறுமையினால் கல்லூரிக்கு செல்ல வில்லை.
இந்த சகோதரி ஒரு ஆடைத் தொழிற்சாலைக்கு சென்று அங்கு மாதார்ந்தம் வழங்குகின்ற 12000 ரூபா சம்பளத்தினைக் கொண்டு தனது குடும்பத்தை பராமரித்து வருகின்றார்.
தான் கல்வி கற்பதற்காக கல்விக் கல்லூரிக்கு சென்று விட்டால் தனது குடும்பத்தை பராமரிக்க எவரும் இல்லை என்பதற்காக இந்த சகோதரி கல்லூரிக்கு செல்ல வில்லை. தாயையும் பராமரிக்க எவருமில்லை.
இந்தக் கல்லூரியில் மூன்று வருடங்கள் கல்வி கற்றால் இந்த சகோதரி ஒரு ஆசிரியையாக வந்திருப்பார். தனது வறுமையினால் இன்று ஆசிரியையாகும் கனவை இழந்து நிற்கின்றார்.
பலரின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த சகோதரி வசிக்கும் வீடானது அறை குறையாக உள்ளது. மின்சாரமில்லை. மல சல கூட வசதியில்லை; கதவில்லை. யன்னல் இல்லை. கீழே தரை போடப்பட வில்லை. இந்த நிலையில் தான் இந்த சகோதரியின் குடும்பம் வசிக்கின்றது.
இந்த சகோதரியை மீண்டும் அக்கல்லூரிக்கு அனுப்ப முயற்சித்தால் உரிய திகதியில் செல்லா விட்டால் அந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சகோதரியை மீண்டும் கல்வியை தொடர வைக்கும் முயற்சியை செய்யலாமா என பலரிடம் ஆலோசனைகளை கேட்டு வருகின்றேன்.
நமதூரின் அரசியல் பிரமுகர்கள் கல்வியலாளர்கள் முக்கியஸ்தர்கள் வர்த்தகர்கள் சமூக நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
முடியுமான சகோதரர்கள் இந்த சகோதரி வசிக்கும் வீட்டுக்கு மின்சார வசதியை மலசல கூட வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
தொலை பேசி இலக்கம் : 0772985028
வட்சப் இலக்கம் : 0771388470
No comments:
Post a Comment