நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஏறாவூர் நகர சபை நிருவாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நாளை (05) வியாழக்கிழமை மேற்படி ஏறாவூர் நகர சபையில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களின் முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் இடம்பெறும் இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் ஏறாவூர் நகர சபை உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பொதுப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்றவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு : 4237 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4024 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 2815 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 1105 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 1308 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், சுயேட்சை குழு 557 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 439 வாக்குகள் 1 ஆசனம் என்ற அடிப்படையில் மொத்தம் 17 ஆசனங்கள் பகிரப்பட்டுள்ளன.
புதிய தேர்தல் முறைமையின்படி கூடுதல் வாக்குகளைப் பெறாத பின்தங்கிய சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments:
Post a Comment