மண்முனைப்பற்று(ஆரையம்பபதி) பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. இந்த சபையின் தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஒரு மேலதிக வாக்கினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மண்முனைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு (4.4.2018) புதன்கிழமை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. 17 உறுப்பினர்களைக் கொண்ட மண்முனைப்பற்று பிரதேச சபையின் இந்த முதலாவது அமர்வில் 17 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது தவிசாளர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சோமசுந்தரம் மாணிக்கராசா மற்றும் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. தவிசாளர் தெரிவுக்காக ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சோமசுந்தரம் மாணிக்கராசாவுக்கு 7 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் ஒரு மேலதிக வாக்கினால் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் போது தமிழ் விடுதலைக் கூட்டணி பெண் உறுப்பினர் ஒருவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடு நிலையாக இருந்தனர். பிரதி தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.சுந்தரலிங்கம், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரி.தயானந்தன் ஆகியோரின் பெயர்கள் முன் மொழியப்பட்டன.
இது திறந்த வாக்கெடுப்பாக நடாத்தப்பட்டது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான எம்.சுந்தரலிங்கத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ரி.தயானந்தனுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான எம்.சுந்தரலிங்கம் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். பிரதி தவிசாளர் தெரிவின் போது 3 உறுப்பினர்கள் நடு நிலை வகித்தனர்.
தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு முஸ்லிம் உறுப்பினரும் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம்; உறுப்பினர் ஒருவரும் மேற்படி சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் என்பவருக்கு ஆதரவாக வாக்களித்ததாலேயே இவர் தவிசாளராக தெரிவாக முடிந்தது.
மேற்படி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் மண்முனைப் பற்று(ஆரையம்பதி) பிரதேச சபை தேர்தலில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டிருந்தார். இந்த சுயேட்சைக்குழுவுக்கு விகிதாசாரத்தில் ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. அந்த ஒரு ஆசனத்திற்கு இவர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் சுயேட்சைக்குழுவிலிருந்து தெரிவான முஸ்லிம் உறுப்பினரும் ஆதரவு வழங்கினர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் வாக்களிப்பின் போது நடு நிலை வகித்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் தவிசாளர் தெரிவிலும் பிரதி தவிசாளர் தெரிவிலும் முன்மொழியப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருக்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment