சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் பகிரங்க வேண்டுகோள்! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் பகிரங்க வேண்டுகோள்! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனம் ஒன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் வழங்கினார். பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா அவர்களிடம் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முக்கியஸ்தரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத் தலைவருமான சிராஸ் மீராசாகிப் முன்னெடுத்திருந்தார்.

மேற்கூறிய செய்தியை இன்று நான் படிக்கவில்லை. கடந்த வருடம் ஜுலை மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த வாகன கையளிப்பு வைபவம் தொடர்பாக அன்று வெளிவந்திருந்த போது படித்தது ஞாபகத்தில் உள்ளது.

ஆனால், இந்த ஜனாஸா வாகனம் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு கையளிக்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை ஒரு ஜனாஸாவைக் கூட அதில் கொண்டு செல்ல முடியாதபடி உரிய ஆவணங்கள் இன்றிக் காணப்படுகின்றது.

ஒரு வாகனத்தை அன்பளிப்பாக கையளிப்பதாயின் அனைத்து விடயங்களையும் சரியாகக் கையாண்ட பின்னரே வழங்க வேண்டும். ஆனால், இந்த வாகனக் கையளிப்பு என்பது ஒரு வித்தியாசமான வகையில் நடைபெற்றுள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகம் மனதார ஏற்றுக் கொண்ட இந்த வாகனத்தை அவர்களால் இன்று வரை பயன்படுத்த முடியாதுள்ளது என்பது மிகக் கவலையான விடயம் மட்டுமல்ல… அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீனுக்கே அபகீர்த்தியையும் கெட்ட பெயரையும் ஏற்படுத்தும் என்றே நான் கருதுகிறேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பாடசாலைத் தோழனும் இதற்கு மேலாக லங்கா அசோக் லேலண்ட் தலைவருமான எனது விருப்பத்துக்குரிய நண்பர் கலாநிதி சிராஸ் மீராஸ்சாகிபின் ஏற்பாட்டிலேயே இந்த ஜனாஸா வாகனம் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அந்த வாகனத்துக்கு உரித்தான ஆவணங்கள் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத் தலைவரான சிராஸ் மீராசாகிபினாலேயே இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றால் இது ஓர் அதிர்ச்சியான, ஆச்சரியமான விசேட செய்தியாகவே கொள்ள வேண்டியுள்ளது. யாரிடம் சென்று ஆறுதல் பெறுவது என்பதும் குழப்பமான விடயம்தான்.

குறித்த வாகனத்துக்கான ஆவணங்கள் இந்தியாவிலிருந்து இன்னும் வரவில்லை என்றே கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்ததாம். இதுவும் நகைச்சுவைமிக்க செய்திதான்.

சிறியதொரு வாகனத்துக்கான பாரிய ஆவணங்களைக் கொண்ட கொள்கலன்களுடனான கப்பல் மும்பாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இலங்கை எங்கிருக்கிறது என்று தெரியாமல் திசை மாறிச் சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் பிரவேசித்து அங்கு கடற் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோ தெரியாது.

குறித்த ஜனாஸா வாகனம் தொடர்பில் நேற்று (30) சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகச சபைத் தலைவர் வை.எம். ஹனீபா சேர் அவர்களையும் செயலாளர் அப்துல் மஜீதையும் தொடர்பு கொண்ட கேட்ட போது, இருவரும் ஒரே கருத்தையே தெரிவித்தனர்.
அதனைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.
‘……இந்த வாகனத்துக்கான ஆவணங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை. பலமுறை நாங்கள் சிராஸ் மீராசாகிப்புக்கு இதனைத் தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்தான் இந்த வாகனத்தைக் கொண்டு வந்தார்…..’

‘…….பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பில் எங்கள் தரப்பில் சில ஆவணங்களை தயார் செய்து அஸீம் என்பவரிடம் கையளித்தோம். ஆனால், இது தொடர்பில் அவரிடமிருந்தும் இதுவரை எந்தக் கதையையும் காணவில்லை….’

‘…..இந்த வாகனத்தை எங்களால் பயன்படுத்த முடியாதுள்ளது. சிலர் ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கு வாகனத்தைக் கேட்கிறார்கள். எங்களால் அதனை எப்படிக் கொடுக்க முடியும்? ஒருவருக்குக் கொடுத்தால் மற்றவர் கேட்பார். இதனால் ஊருக்குள் பிரச்சினை அல்லவா தோன்றும்’…. ? என்று அவர்கள் இருவரும் என்னிடம் தெரிவித்தனர்.

பாருங்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் எவ்வளவு தூரம் இவர்கள் இருவராலும் அலைக்கழிக்க வைக்கப்படுகிறது என்பதனை. அன்று கலாநிதி சிராஸ் மீராசாகிபை நம்பினார்கள். இன்று அஸீம் என்ற நபரை நம்பிக் கெட்டுப் போயுள்ளார்கள்.

யார் இந்த அஸீம் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அம்பாறை மாவட்டத்தில் அகில மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த பலரும் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ போன்றும் கட்சியின் உண்மையான பற்றாளர்கள் ‘தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினது’ போன்றும்தான் காணப்படுகின்றனர்.

எனவே, கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களே! தயவு செய்து இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு இன்று சிறைப்பட்டுக் கிடக்கும் ஜனாஸா வாகனத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுங்கள்.

Siddeque Kariyapper

No comments:

Post a Comment