பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்தமையால் தாம் அமைச்சு பதவிகளிருந்து விலக மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, 23 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் கட்டாயம் பதவி நீக்கம் செய்யப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்கள்,
பிரதமருக்கு எதிராக வாக்களித்தமையால் தாம் அமைச்சு பதவிகளிருந்து ஒருபோதும் விலகமாட்டோம். இந்த அரசாங்கத்தின் தலைவர் எமது ஜனாதிபதியே ஆவார். அவர் முடிவும் எடுக்கும் வரை நாங்கள் பதவி விலகமாட்டோம்.
இது கூட்டு அரசாங்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு ஏற்ப எங்களை பயன்படுத்த முடியாது. எமது அமைச்சு பதவிகளை பறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு வழங்கவே சூழ்ச்சி செய்கின்றனர் என்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால ஆகியோர் பிரதமருக்கு எதிராக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திசநாயக்க, பைசர் முஸ்தபா, மகிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜித் விஜிதமுனி சொய்சா, பியசேன கமகே, மோகன் லால் கிரேரோ, சிறியானி விஜேவிக்கிரம, லக்ஸ்மன் செனவிரத்ன, ஹிஸ்புல்லா, ஏ.எச்எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, சாரதி துஸ்மந்த, மனுச நாணயக்கார, மலித் ஜெயத்திலக, வீரகுமார திசநாயக்க, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், நிசாந்த முத்துஹெட்டிகம, இந்திக பண்டார நாயக்க ஆகியோர் நேற்று வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment