காணிப் பிணக்குகளில் இணக்கம் ஏற்படுத்துவதன் அடுத்த கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் காணி மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

காணிப் பிணக்குகளில் இணக்கம் ஏற்படுத்துவதன் அடுத்த கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் காணி மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்படும்

காணிப் பிணக்குகளில் இணக்கம் ஏற்படுத்துவதன் அடுத்த கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் காணி மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்படும் என மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ. முஹம்மத் ஆஸாத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மாவட்ட காணி மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள் குறித்துக் கேட்டபோது புதன்கிழமை 04.04.2018 அவர் இந்த விவரங்களைத் தந்தார்.

இலங்கையில் ஏற்கெனவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு இயங்கத் துவங்கியுள்ளன.

மேலும், ஏப்ரல் மாதம் அனுராதபுர மாவட்டத்தில் மாவட்ட காணி மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதேவேளை அதன் தொடர்ச்சியாக அம்பாறை முல்லைத்தீவு, வவனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணி மத்தியஸ்த சபைகளுக்கு அங்கத்தவர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

மாவட்டத்திற்கு ஒரு காணி மத்தியஸ்த சபை என்ற அடிப்படையில் இந்த காணி மத்தியஸ்த சபை அங்கு வாழும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமைந்துள்ளது. பிரதேசத்தில் காணப்படும் காணி சம்பந்தமான பிணக்குகளுக்கு சம்பந்தப்பட்ட சாராருக்கிடையில் சமரசத்தைக் கொண்டு வருவதே காணி மத்தியஸ்த சபையின் பிரதான நோக்கமாகும்.

மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்தக் காணி மத்தியஸ்த சபை இடம்பெயர் சேவைகளை நடாத்தி காணிப் பிரச்சினைகளில் சமரசத்தை ஏற்படுத்தும். தேவையுள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப அதிக சேவைகளைச் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கும்.

அதேவேளை, 2 மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட காணிப் பிணக்குகளுக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கே காணி மத்தியஸ்த சபைக்கு அதிகார வரம்பு உள்ளது. அதற்கு மேற்பட்ட காணிப் பிணக்குகளுக்கு வழமை போன்று நீதிமன்ற நடைமுறைகளையே அணுக வேண்டியிருக்கும்.’ என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments:

Post a Comment