மாணவர் மத்தியில் அதிகரித்து செல்லும் ஒழுக்கக் கேடு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 4, 2018

மாணவர் மத்தியில் அதிகரித்து செல்லும் ஒழுக்கக் கேடு!

முன்னைய தலைமுறை மாணவர்களைவிட இன்றைய மாணவர்கள் அதிகமான வாய்ப்பு வசதிகளை அனுபவிப்பது மட்டுமின்றி இணையதளம், ஸ்மார்ட் போன் போன்ற பல சாதனங்களைக் கையாளுகின்ற வாய்ப்பையும் பெற்றுள்ளனர். இந்தத் தலைமுறை மாணவர்களிடையே முன்னெப்போதையும் விட ஒழுக்கக்கேடுகள் மலிந்திருப்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதேநேரம் தமது பிள்ளைகள் செய்கின்ற இழிசெயல்களை கண்டும் காணாமல் காலம் கடத்துகின்ற பெற்றோர்கள் இன்று அதிகம். சமூகத்தில் பாடசாலை மாணவர்களும், இளைஞர்களும் திசைமாறிப் பயணிப்பதுக்கு மிக முக்கியமான வகிபங்கினை வீடு, பாடசாலை என்பன வழங்குகின்றன.

மாணவனுக்கு கிடைக்கின்ற முதலாவது சூழல் வீட்டுச் சூழல். அந்தச் சூழல் சிறப்புற அமைதல் வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுடன் மிக நெருக்கமாக நண்பர்கள் போல் பழகுதல் வேண்டும். ஆனால் இன்றுள்ள அதிகமான வீட்டுச் சூழலில் அவை இல்லாமல் போய் பெற்றோர் சர்வாதிகாரிகள் போல் நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

இரண்டாவது பாடசாலை சூழல்.பாடசாலை சூழல் சிறப்பாக அமைவது அவசியம். அன்றாடம் பிரச்சினை ஏதுமின்றிக் கடந்தால் போதும் என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். அனுபவம் மிக்க கல்வியாளர்களின் வழிகாட்டுதல்களின் பேரில், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான உறவு பற்றிய ஆழமான, தெளிவான விவாதங்கள் நடத்துவதும், ஆசிரியர்கள், மாணவர்கள் இருதரப்பினரும் பங்குபெறும் வகையில் செயலமர்வுகளை நடத்துவதும் அவசியம்.

வணிகமயமாக்கப்பட்டுவிட்ட இந்தக் கல்வி முறையில் பல விதங்களிலும் வேரூன்றி விட்ட ஒழுக்கக்கேட்டினைத் தவிர்க்கும் வகையில், தினந்தோறும் உளநல வகுப்புகளை நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். இன்றைய யுகம் நவீன யுகம். தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கின்றோம். ஆனால் ஒழுக்கம், பண்பாடு, கலாசார விஷயத்தில் மிகப் பின் தங்கியவர்களாக இருக்கிறோம். நமது தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. 

மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் மீதான அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது. அதன் விளைவு? இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் தொடங்கிவிட்டது மனித சமூகம்.

பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவ்வாறானவர்கள் பெற்றோர் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம், தான் செய்த தவறுகளுக்காக ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. கண்டிக்கும் ஆசிரியர்களைத் துன்புறுத்தவும், சில நேரங்களில் கொலை அச்சுறுத்தல் செய்யவும் துணிந்திருக்கிறார்கள்.

தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் தோழமை பாராட்டுவது, நட்புடன் நடந்து கொள்வது போன்ற விஷயங்கள் அழிந்து போய் அற்பமான காரணங்களுக்காக குரோதம் வளர்த்து, சண்டையிடும் வில்லன்களாக இன்றைய மாணவர் சமூகம் மாறி இருக்கிறது. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள் பலர்.

'தம்பி சைக்கிளை இப்படி வேகமாக ஓட்டாதே' என்று புத்திச் சொன்ன பெரியவரை அவமதித்து, காயப்படுத்தும் மாணவர்கள் நம்மிடையே அதிகமதிகம். ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் செல்வதும், பாடசாலை கலைகின்ற நேரங்களில் வீதியோரங்களில் வீணாகக் காத்துக் கிடப்பதும் அன்றாடம் காணும் காட்சிகள்.

இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கைச் சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் திணறுகின்றனர். எந்தவொரு விடயத்திற்கும் சுயமாக தீர்வுகாண முடியாமல் தங்கிவாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதற்கு முழுப்பொறுப்பினையும் பெற்றோர்களே பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர். இந்த நூற்றாண்டை நோக்கும்போது தவறு செய்பவர் பட்டியலில் அதிகம் இடம்பெறுபவர்கள் படித்தவர்களாகவே இருக்கின்றனர் மாணவர்களின் பண்பாடு குறித்து அவர்களின் பெற்றோர்களே முழுமையான அக்கறை கொள்ள வேண்டும்.

றிசாத் ஏ காதர்

No comments:

Post a Comment