
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்திலிருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில், புதிய அமைச்சரவையொன்றின் அவசியம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதன் அடிப்படையிலேயே புதிய அமைச்சரவையின் உருவாக்கம் தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் அதனைத் தொடர்ந்து அரசாங்கத்தில் இடம்பெறக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
'அரசாங்கத்திலிருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப் பார்களா யின் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதே தார்மீகம். அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டு அவநம்பிக்கையுடன் அவர்களால் தொடர்ந்தும் இதே அரசாங்கத்திலிருக்க முடியாது.
இந்நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினர்களின் இடத்துக்கு புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளோம்." என்றும் அமைச்சர் ராஜித்த கூறினார். அத்துடன் இது, 'மறுசீரமைக்கப்படும் அமைச்சரவையாக அல்ல, புது அமைச்சரவையாகவே இருக்கும்.' என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடுநிலைமையாக செயற்பட விரும்புவதன் காரணமாகவே வாக்களிப்பைத் தவிர்த்துக் கொள்கின்றார்களே தவிர தாமரை மொட்டுக் கட்சிக்கு சார்பாக அல்ல என்றும் எமக்கு முன்கூட்டியே அறியத்தந்திருப்பதனால், அவ்வாறானவர்களை நாம் அரசாங்கத்திலிருந்து விலக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விளக்கமளித்தார்.
"சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக போலியான தகவல்கள் உலா வருகின்றன. இது முற்றிலும் பிழையானதொரு செய்தி. அதனை நான் ஜனாதிபதியிடமே நேரடியாக கேட்டு உறுதி செய்து கொண்டேன். அதற்கு அவர் அனைத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என மட்டுமே தான் கேட்டுக்கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தார். ஆதரவாக வாக்களிக்கும் அமைச்சரவை உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியதொரு அமைச்சரவையை உருவாக்க வேண்டுமென நாம் முன்வைத்த யோசனைக்கும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்." என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment