ஏறாவூர் நகர சபை முதலாவது அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இரண்டாக பிளவு பட்டு வாக்களித்தனர். ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு (5.4.2018) வியாழக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற போது தவிசாளர் தெரிவு நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் ஏறாவூர் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தனியாகவும் மீராலெவ்வை றஊபாசம் என்பவரின் தலைமையில் அவருடன் இருவர் ஒரு குழுவாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரிந்து இருந்தனர்.
இதில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற அப்துல் வாசித் அலிக்கு ஆதரவாக மீராலெவ்வை றஊபாசம் என்பவரின் தலைமையில் அவருடன் இருவரும் தவிசாளர் பதவிக்காக போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது நழீம் என்பவருக்கு ஆதரவாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரும் வாக்களித்தனர். இதே நேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மீராலெவ்வை றஊபாசம் என்பவரே பிரதி தவிசளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சபை அமர்வின் பிரதி தவிசாளருக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவின் ஆதரவுடைய உறுப்பினரான நழீம் என்பவரை முன் மொழிந்து விட்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் சபை அமர்விலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர் வெளியேறி விட்டார்.
இறுதியில் பிரதி தவிசாளருக்காக முன் மொழியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவின் ஆதரவுடைய உறுப்பினரான நழீம் என்பவர் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேற்படி மீராலெவ்வை றஊபாசம் பிரதி தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment