துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு

துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஒஸ்மான்காசி பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தினுள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த அந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதில் அந்த பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ஒரு விரிவுரையாளர் மற்றும் ஒரு பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிக்க முயற்சிக்காமல் போலீசாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பல்கலைகழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment