பஹ்ரைன் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் கச்சா எண்ணை சுரக்கும் புதிய பெட்ரோல் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் சன்னி இனத்தவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் பெட்ரோலிய கச்சா எண்ணை உற்பத்தியை நம்பியுள்ள இந்த நாட்டில் கடந்த 1932-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோல் கிணற்றின் மூலம் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பீப்பாய் (ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர்) அளவிலான பெட்ரோலிய கச்சா எண்ணை கிடைக்கிறது.
இதுதவிர, அபு சஃபா பெட்ரோல் கிணற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பீப்பாய் அளவிலான பெட்ரோலிய கச்சா எண்ணை கிடைக்கிறது. இதில் சரிபாதியை சவுதி அரேபியாவுக்கு பஹ்ரைன் கொடுத்து விடுகிறது.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் சவுதி அரேபியா அமைந்துள்ள திசையில் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி முஹம்மது பின் கலிபா அல்-கலிபா இன்று அறிவித்துள்ளார்.
இந்த கிணற்றில் சுமார் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் என அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அகழாய்வு நிறுவனத்தினர் மதிப்பீடு செய்துள்ளனர். பணிகள் முடிந்து இங்கிருந்து கச்சா எண்ணை எடுக்க இன்னும் ஐந்தாண்டுகள் ஆகலாம். அதுவரை இந்த புதிய கிணற்றில் இருந்து தினந்தோறும் கிடைக்கும் கச்சா எண்ணையின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதை இப்போதே துல்லியமாக மதிப்பீடு செய்துவிட முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment