தற்பொழுது இலங்கையின் சில பகுதிகளில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில சகோதரர்களாலும், குழுக்களாலும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உடமைகள் அழிக்கப்பட்டும், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் வரும் ஆபத்தான சூழல் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் முஸ்லிம்களாகிய நாங்கள் அவதானமாகவும், ஆக்கபூர்வமாகவும் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும்.
அந்த வகையில் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகம் மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டி இருப்பது போன்று சமூக வலைதளங்களில் குறிப்பாக முகநூல், வட்சப் போன்ற வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கப்போவதாகவும் ஒரு சில இன வெறியாளர்களால் பதிவுகள் போடப்பட்டுவருகிறது.
இவ்வாறான பதிவுகளுக்கு ஆத்திரமடைந்த சில முஸ்லிம் சகோதரர்கள் ஆவேசமான வார்த்தைகளையும், குறிப்பாக அந்த மதத்தினரை முழுமையாக பாதிக்கக்கூடிய வகையில் பின்னூட்டம் இடுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இது மிகவும் தவறான செயலாகும். இவ்வாறான பதிவுகள் இடுபவரின் நோர்க்கத்தை அடைய நாமே வழி செய்து கொடுப்பது போன்றாகும்.
இவர்களின் பதிவுகளுக்கு நாம் இடும் பின்னூட்டத்தை பிரதி செய்து இன்னும் இனவாதத்தை நமது சமூகம் மீது மேற்கொண்டு பிரச்சனைகளை பெரிதாகி பாரிய போராட்டத்தை ஏற்படுத்துவார்கள்.
எனவே இவ்வாறான ஒரு சிலரின் நடவடிக்கைகள் முழுமையாக அந்த சமூகத்தின் நடவடிக்கை அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே பல இன சகோதரர்களோடு இணைந்து வாழும் நாம் அவதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
எனவே இது போன்ற கீழ் தரமான இன முறுகல் நிலையை ஏற்படுத்தக் கூடிய எந்த பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட வேண்டாம் என்றும் நாம் பதிவுகள் இடும் போது அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.
பஹ்த் ஜுனைட்
ஊடகவியலாளர்
No comments:
Post a Comment