"முஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான் எடுத்துரைப்பு! அறிக்கைகளையும் சமர்ப்பித்தார்!" - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

"முஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான் எடுத்துரைப்பு! அறிக்கைகளையும் சமர்ப்பித்தார்!"

நேற்று  (5.3.2018) ஜெனீவாவில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில் பங்கேற்பதற்காகவே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் நேற்று ஜெனீவா சென்றடைந்தார். 

ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களுடனும், ராஜதந்திரிகளுடனும் இலங்கை நிலவரங்கள் தொடர்பில் அவர் சந்திப்புக்களை மேற்கொண்டார். அத்தோடு “மத சுதந்திரமும் நாடுகளின் கடமையும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாடுகளுக்கான உபகூட்டத்திலும் கலந்து கொண்டார்.
நேற்று காலை ஜெனீவா நேரப்படி 9.30 மணிக்கு ஐ.நாவின் சிறுபான்மை மக்களுக்கான உரிமை பணிமனையில் முதலாவது சந்திப்பினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து OIC அமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதியையும் சந்தித்தார். அத்தோடு மதரீதியான சிறுபான்மைமக்களின் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும் சிரேஸ்ட இராஜதந்திரியான நொக்ஸ் தேம்ஸ் அவர்களுடனும் விசேட சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். 

இந்த சந்திப்புக்களின் போது இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பில் விரிவாக எடுத்துக்கூறிய அப்துர்ரஹ்மான் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விரிவாக எடுத்துக்கூறினார்.

“அம்பாறையில் நடந்த இனவாத தாக்குதல்கள் வேண்டுமென்ற முறையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். இதில் நூற்றுக்கணக்கான இனவாதிகள் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டதோடு, இத்தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம் வியாபார ஸ்தாபனங்களுக்கும், பள்ளிவாயலுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 
அத்தோடு 500 மீற்றர் தொலைவில் பொலீஸ் நிலையம் இருந்தபோதிலும் இத்தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தவதற்கு போலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாத்திரமல்லாது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் தவறிவிட்டனர். 

மறுநாள் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் ICCPR சட்டத்தின்கீழ் குற்றப்பதிவு செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த ICCPR சட்டத்தின் பிரகாரம் இந்த சந்தேக நபர்களுக்கு நீதி மன்றம் பிணை வழங்க முடியாது. இருப்பினும் மறுதினம் நீதி மன்றில் இந்தவிடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, பொலீசார் ICCPR குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றுக்கொண்டு, அவர்களே சந்தேகநபர்களுக்கு பிணையினையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். 

இது போன்ற இனவாத தாக்குதல்களின்போது, சட்டம் ஒழங்கை நிலைநாட்ட வேண்டியவர்களே அதற்கு அனுசரணையாக நடந்து கொள்கின்றார்கள் என்பது பொதுவான அவதானமாகும். இதனை நிரூபிக்கும் வகையிலேயே பொலீசார் அம்பாரை சம்பவத்திலும் நடந்து கொண்டுள்ளனர். 
இனவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்காகவே ICCPR எனும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனைப்பாவித்து இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறிவருகின்றது. அதன் விளைவாகவே அரசாங்கம் மாறிய பின்னரும் கூட இந்த இனவாத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என்றும் தெரிவித்தார்.

அத்தோடு கண்டி-தெல்தெனிய மற்றும் திகண உட்பட்ட பிரதேசங்களில் நடந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினார். தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பதட்ட நிலை காணப்பட்ட போதிலும் வன்முறைகளை தடுப்பதற்கேற்ற போதுமான பாதுகாப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் தவறவிட்டிருக்கிறது. 

மேலும் பதட்டம் நிலவிய சூழ்நிலையிலும் வன்முறையாளர்கள் ஊர்வலமாக செல்வதனை பொலிஸார் தடுக்கவில்லை. இதன் பின்னணியிலேயே தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் இன்றைய மிக மோசமான வன்முறைகள் நடந்து முடிந்துள்ளன. 

இதில் முஸ்லிம்களின் வீடுகளும், வர்த்தக நிலையங்களும் ,பள்ளிவாயல்களும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பலரும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏனைய இடங்களுக்கும் இது பரவலாம் என அஞ்சப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.
அத்துடன் அம்பாறை வன்முறைகள் பற்றிய அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தார். இவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்திய மனித உரிமை அறிக்கையாளர், ஏனைய அதிகாரிகளும் இச்சம்பவங்கள் பற்றிய இன்னும் சில அறிக்கைகளையும் உடனடியாகத் தருமாறுகோரினார். 

இலங்கையில் தொடரும் சம்பவங்கள் மிகவும் கவலை தருவதாகவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனைக்கொண்டு வருவதாகவும், அதற்கான உரிய உயர்மட்ட அழுத்தங்களை கொடுக்கக்கூடிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து கண்டி தெல்தெனிய திகன பகுதிகளில் நேற்று நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களும் குறித்த சிறுபான்மை மனித உரிமை பணிமனைக்கும் ஏனைய இராஜ தந்திரிகளும் அனுப்பி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment