பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர் - அமைச்சர் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர் - அமைச்சர் மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங்கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை. பிரதமர் தொடர்பில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்களிப்பு நான்காம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் நம்மவர் சிலருக்கு இந்த விடயத்தில் குழப்பம். நம்மில் சிலர் அளவுக்கு அதிகமாக புல்லரித்து போய், திடுக்கிட்டு போய், இவர்களில் ஒரு சாராரை இராமர்களாகவும், அடுத்த சாராரை இராவணர்களாகவும் கருதிக்கொண்டு தடுமாறுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், நேற்று மாலை, கொழும்பு கம்பன் கழக விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழரசு தந்தை செல்வா சத்தியாக்கிரக வழியை தேடி, பின் உள்ளூரில் ஒப்பந்தங்களை செய்து தீர்வை தேடும் வழியை முன்னெடுத்தார். அந்த வழிக்கு பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர். பின் கூட்டணித் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் பாரதத்தின் துணையை பிரதானமாக கொண்டு தீர்வு தேடும் வழியை நாடினார்.

அதையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஆயுத போராட்ட வழியை முன்வைத்து போராடினார். இன்று கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், உலக சமூகத்தை துணைக்கு கொண்டு, ஐநா சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்வைத்து அவரால் இயன்றதை செய்து வருகிறார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான், சகோதர இனங்களுக்கு எமது இன்னல்களை, அபிலாஷைகளை எடுத்து கூறி தீர்வு தேடும் சகவாழ்வு வழியை முன்வைத்து என்னால் இயன்றதை செய்து வருகிறேன்.

இந்த அனைத்து வழிகளும் தீர்வை காணாவிட்டால், கடவுள் விட்ட வழிதான். தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு தேடும் பணி இன்று பாதியில் நிற்கிறது. இதுவரையிலே எமக்கு கிடைத்து இருப்பது, இடைக்கால அறிக்கை என்ற ஒர் ஆவணம் மட்டுமே. இதற்கு முன் எங்கள் முன்னோர் எழுதி வைத்த ஆவணங்களுடன் இதையும் அடுக்கி வைக்க போகிறோமா என நாம் தீர்மானிக்க வேண்டும்.

ஆகவேதான் இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்து தேடி, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளை தேடுவது எனது நோக்கம் ஆகியுள்ளது. அந்த வழியை எங்கள் அரசுக்கு உள்ளேயே தேடும் நோக்கில் நாம் இருகின்றோம். பழைய ஆட்சியரை கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமர செய்ய விரும்பவில்லை.

No comments:

Post a Comment