நல்லாட்சி அரசில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடம் உறுதியளித்திருக்கிறார். தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசு மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா ப் பிரேரணை குறித்தும், சிறுபான்மை மக்களின் மனநிலை தொடர்பாக கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமாகக் காணப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகள் சார்பில் அமைச்சர்கள் மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டாக்டர் ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி செயலாளர் கபீர் ஹாஷிம், கட்சி உயர்மட்டத்தைச் சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர். முஸ்லிம்கள் தரப்பிலான முக்கிய இரண்டு கட்சிகளினதும் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளத்தவறியதை பங்காளிக் கட்சிகள் இங்கு சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பேச்சுக்களை ஆரம்பித்து அமைச்சர்கள் மனோ கணேசனும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் சிறுபான்மை சமூகங்களும், பங்காளிக் கட்சிகளும் கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டியதோடு இதனை வைத்துக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்து அரசின் பயணத்தை சீர்குலைக்கப் போவதில்லை என உறுதி படத் தெரிவித்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சமாக தோற்கடிப்போம் என பங்காளிக் கட்சிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளன.
நல்லாட்சிப் பயணத்தில் கடந்த மூன்றாண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக எதுவும் இடம்பெறவில்லை. மஹிந்த ஆட்சியில் போன்றே இந்த ஆட்சியிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் உணர்கின்றனர் என அமைச்சர் மனோகணேசன் பிரதமரிடம் காட்டமாக எடுத்துரைத்திருக்கிறார்.
அரசியல் தீர்வு விடயத்தில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல், அபிவிருத்தி எதிலுமே முன்னேற்றம் காணப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளனர். கண்டி, திகன, அம்பாறை போன்ற இடங்களில் நடந்த சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு துரோகமிழைத்துவிட்டதாகவே முஸ்லிம் சமூகம் விசனமடைந்து காணப்படுகின்றது.
தமிழ், முஸ்லிம் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த நம்பிக்கையை எப்படி மீளக்கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் அரசு எவ்வாறான வழிகளை கையாளப்போகிறது என்பது கேள்விக்குறியதாகும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் பிரதமரிடம் நேரடியாகவே எடுத்துரைத்துள்ளார்.
பங்காளிக் கட்சிகள் கூட ஏமாற்றப்பட்டுள்ளனர். நாம் எடுத்துக் கூறிய பல விடயங்களையும் அரசு உதாசீனப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொண்டது. இந்தத் துரோகத்துக்காக நாம் பழிதீர்த்துக் கொள்ள துரோகமிழைக்க மாட்டோம். நிச்சயமாக உங்களை காப்பாற்றுவோம். இனியாவது அரசின் பயணப் பாதையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது தவறுகள் இடம்பெற்றிருப்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டதோடு அவற்றைச் சீர் செய்ய உடனடியாக மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன் எதிர்வரும் 5ம் திகதி முதல் பயணப்பாதை திசை திருப்பப்படும் என உத்தரவாதமளித்துள்ளார்.
ஆலோசனை குழுக்கள் வேண்டாம் செயற்பாடுகளே முக்கியம், பங்காளிக் கட்சிகளுடன் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டியதே முக்கியமென பங்காளிக்கட்சிகள் சுட்டிக் காட்டியதை பிரதமர் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். தவறுகளுக்கான முழுப் பொறுப்பையும் பிரதமர் இங்கு ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment