
சகல இனங்களுக்கிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை, இணக்கம் என்பன முக்கியமாகும். ஏதேனும் ஒரு விடயத்தில் சட்டத்தை அமுலாக்கும் போது பக்கச்சார்பாக இருக்கக் கூடாது. இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீப்பிக்கா உடுகம தெரிவித்தார்.
கண்டி, திகன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பிரதேசத்திலுள்ள சமயத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் முக்கிய கலந்துலையாடலை நடத்தியது. அதன் பின்னர் திகன தனியார் விடுதியொன்றில் மேற்படி ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலாநிதி தீப்பிக்கா உடுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான திருமதி அம்பிகா சற்குணநாதன், கஸ்ஸாலி ஹூஷையின், கலாநிதி வீ.விதான பத்திரன மற்றும் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய இணைப்பதிகாரி குமுதினி விதானகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீப்பிக்கா உடுகம மேலும் கூறுகையில், "நீண்ட காலமாக தலைமுறை தலைமுறையாக ஒற்றுமையுடன் வாழ்ந்த சிங்கள, -முஸ்லிம் மக்களுக்கிடையில் பாரிய விரிசலை ஏற்படுத்த வெளியார் சிலர் எடுத்த முயற்சியின் விளைவே இங்கு இடம்பெற்ற வன்முறைகள் எனத் தெரியவருகிறது.
திகனையில் தலைமுறை தலைமுறையாக சிங்கள, முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்துள்ளனர். அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். மதத்தலைவர்கள்,பொதுமக்கள், சமூக அமைப்புகள், பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பலரைக் கொண்ட சமூக கலந்துரையாடல் ஒன்றும் அன்றைய தினம் இடம்பெற்றது.
அதில் வன்முறையின் போது மரணமடைந்தவரின் மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். சமூகம் விழிப்பாகவும் கடும் அவதானத்துடனும் இருக்குமாயின் அநேக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
ஒற்றுமையாக வாழ்ந்த இரு சமூகங்களுக்கிடையில் தவறான தகவல்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்களிடம் நாம் எடுத்துக் கூறினோம். இப்பிரச்சினை தொடருமாயின் சிக்கல்களுக்கு முடிவே இருக்காது.
இப்படியான நிலைமைகளின் போது பிரஜைகள் விழிப்படைய வேண்டும் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். சகல தரப்பினர் மத்தியிலும் பாதுகாப்பற்ற நிலைமை பற்றிய சந்தேகம் காணப்படுகிறது. உள்ளத்தில் வைராக்கியம் ஏற்படும் போது அது வன்செயல்களில் முடிகின்றது எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீப்பிக்கா உடுகம தெரிவித்தார்.
"2014 ம் ஆண்டு முதல் சில பிரச்சினைகள் உருவாகின. அழுத்கம, பேருவளை, ஜிந்தோட்டை, அம்பாறை, தெல்தெனிய என்று அடிக்கடி இவ்வாறு அதிகரித்துச் சென்றுள்ளது. இவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளால் ஒரு நாடு நிமிர்ந்து நிற்க முடியாது. மக்களைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
வெளியார் தூண்டி விட்டுச் சென்று விடுவர். ஆனால் குடிமக்கள் தொடர்ந்தும் வாழ வேண்டும். சிறு பிரச்சினைளை பூதாகரமாக்கும் நிலைமைகள் இதன் பிறகும் ஏற்படலாம்.சிறிய தகவல் கிடைக்கும் போதே சமூகம் விழிப்படையுமாயின் அதனைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
சமூக வலைத் தளங்கள் தவறான செய்திகளைப் பரப்பும் போது பாரம்பரிய ஊடகங்கள் அது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். சமூக அங்கத்தினர்களாலேயே பிரச்சினையைத் தடுக்க முடியும். வெளியிலிருந்து நாம் சமாதானத்தை மேற்கொள்வதை விட சமூகத்திலேயே அது உருவாக்கப்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்களை கைது செய்தமை சட்டபூர்வமானதாக இருப்பின் அதனை உரிமை மீறலாகக் கொள்ள முடியாது. ஏனெனில் அத்தகைய வதந்திகளே பாரிய விளைவை ஏற்படுத்தியுள்ளன.எனவே சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாயின் அதனை உரிமை மீறலாகக் கருத முடியாது.
நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இவ்வாறான வன்முறைகள் நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல. நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதன் ஊடாகவே நாடு சுபிட்சமடைய முடியும்.
எம்.ஏ. அமீனுல்லா
No comments:
Post a Comment