அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதி முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கத் தலைவர் வாமதேவன் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
பேருந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் புதிய பேருந்து நிலையம் தொடர்பான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், முதலாம் திகதியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு எம்மையும் செல்லுமாறு தெரிவித்ததுடன் பழைய பேரூந்து நிலையத்தினை மூடுமாறும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கலந்துகொள்ள எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் வேறு பலர் இவ்விடயத்தில் சம்பந்தப்படாதவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். 1800 மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட எமது சங்கத்தினை வெளியேறுமாறு தெரிவித்து முதலமைச்சர் கூட்டத்தை நடத்தி அவர் எம்மை அவமதித்து விட்டார்.
பேருந்து நிலையம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே, முதலமைச்சர் - அதிலும் நீதிபதியாக இருந்தவர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
எனவே எமது சேவைகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்துமாறு தெரிவித்தால் எமது தொழிலாளர்களின் நலன்கருதி முதலாம் திகதியில் இருந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என வாமதேவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment