உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் சுயேட்சைக்குழு ஒன்றிற்கு ஆதரவாக அரச உயர்நிலை அதிகாரி ஒருவரும், அரச உத்தியோகத்தர்கள் சிலரும் பகிரங்கமாகவும், இரகசியமாகவும் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், வேட்பாளருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று (28) ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் சுயேட்சைக்குழு ஒன்றிற்கு ஆதரவாக அரச உயர்நிலை அதிகாரி ஒருவரும், அரச உத்தியோகத்தர்கள் சிலரும் பகிரங்கமாகவும், இரகசியமாகவும் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த அதிகாரிகள் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டமைக்கான சகல ஆதாரங்களும் எம்மிடமுள்ளது.
இவ்வாறான உயரதிகாரிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகும், எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுகுறித்து நாம் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் முறையிட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த அரச உயர்நிலை அதிகாரி உட்பட அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டமை CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எம்.ஜே.எம்.சஜீத்
No comments:
Post a Comment