"மிஹிசரு விருது விழா 2017" ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. மேல் மாகாணத்தில் கழிவு முகாமைத்துவத் துறையில் விசேட திறமைகளைக் காட்டிவரும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களை பாராட்டி பலப்படுத்துவதன் மூலம் கழிவு முகாமைத்துவத்தை சரியான முறையில் மேற்கொள்ளும் நோக்குடன் மேல்மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையினால் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கழிவு முகாமைத்துவத்தை உரிய முறையில் மேற்கொண்டுவரும் உள்ளூராட்சி நிறுவனங்கள், பாடசாலைகள், சிறுவர் பாடசாலைகள், அரச நிறுவனங்கள், ஆரோக்கிய நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கழிவு முகாமைத்துவத்திற்கு பங்களிப்பு செய்துவரும் சுற்றாடல் பொலிஸ் பிரிவுகளின் செயற்பாட்டாளர்கள், சுற்றாடல் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை இராணுவத்தின் நகர அழகுபடுத்தல் பிரிவு ஆகியவற்றின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டதுடன், பிளட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.
எட்டு பிரிவுகளின் கீழ் பதின்மூன்று தங்க விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன. இலங்கையில் கழிவு முகாமைத்துவத்திற்கு உயிரியல் வாயு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய காலம் சென்ற ஜீ.கே. உபவங்சவுக்கான 'மிஹிசரு சுவர்ணபிமான' விசேட விருது ஜனாதிபதியினால் அவரது மகன் சாகர தேசப்பிரிய உபவங்சவிற்கு வழங்கப்பட்டது.
மேல் மாகாணத்தில் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டு சுற்றாடலைப் பாதுகாப்பதில் முன்னுதாரணத்தை வழங்கிவரும் பாணந்துறை, நல்லூர் முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான 'பரிசர கெகுளு' பிளட்டினம் விருது ஜனாதிபதியினால் இதன்போது வழங்கப்பட்டது.
'மிஹிசரு பசுமை விபரக்கொத்து' ஜனாதிபதியின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, மேல்மாகாண ஆளுநர் கே.சி லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment