(இராஜதுரை ஹஷான்)
பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களிடம் பெறும் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை அனைத்து மாகாண மட்டத்திலும் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கபட்ட பிள்ளை நீதிமன்றில் திறந்த வெளியில் சாட்சியமளிக்கும் போது பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும்.
எனினும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதால் குறித்த சாட்சிகள், ஒளிப்பதிவு செய்து பெற்றுக் கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் காணொளிப்பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கியதாக மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை நிறுவுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment