சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது எம்மிடமும் கேட்டு அறிந்து பதிவிடுங்கள் : கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி நகுலேஸ்வரி புள்ளநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் - அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது எம்மிடமும் கேட்டு அறிந்து பதிவிடுங்கள் : கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி நகுலேஸ்வரி புள்ளநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் - அமைச்சர் வியாழேந்திரன்

சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம். ஆனால் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது அறிந்து கொண்டு, அது தொடர்பில் எம்மிடமும் கேட்டு பதிவிடுங்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், டெப் கணனிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளுக்கு 778 டெப் கணனிகள் வழங்கு வைக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் நானும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களுக்குமாக 3943 டெப் கணனிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் நாம் கல்வித் துறைசார் வளர்ச்சியை மேம்படுத்துத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆளும் கட்சியில் இருக்கின்ற நாங்கள் ஒவ்வொரு துறைசார்ந்த வினைத்திறன் மிக்க சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கனை முன்னெடுத்து வருகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கல்வி தொடர்பான விடயங்களை முதலாவதாக ஆராயப்படும் விடயமாக நாம் கொண்டு வந்திருக்கின்றோம்.

அடுத்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தமிழருக்கானது இந்த வாய்ப்பை தாரை வார்க்கத் துணைபோகும் தமிழ் தலைவர்கள் என தெரிவித்து என்னுடைய பெயரையும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் பெயரையும் இட்டு கல்விச் சமூகம் கிழக்கு மாகாணம் என எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது.

மாவட்டத்திலே சிரேஸ்ட நிலையிலுள்ளவர்களை அடுத்தடுத்து பதவி நிலைகளுக்குத் கொண்டு வந்தால்தான் அடுத்தடுத்து எம்மவர்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.

இவ்வாறான விடயங்களை நாசமாக்கியவர்கள் இந்த மாவட்டத்தினுடைய முன்னாள் அரசியல்வாதிகள்தான்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதும் அதற்குரிய கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

பெரியபோரதீவு நிருபர்

No comments:

Post a Comment