(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்தியுள்ளார் என ஆரம்ப சுகாதார சேவைகள்,தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங்கிடம் தெரிவித்தார்.
உலக சுகாதார தாபனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட பிரதிநிதி அலகா சிங்கிற்கும், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று சுகாதார அமைச்சில் இடம் பெற்றது.
நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமைகள் மற்றும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் இப்பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டது.
ஆரம்ப சுகாதார சேவைகளின் முக்கியத்துவம், ஆரம்ப சுகாதார சேவையின் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வது குறித்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரநிதிநிதி தெளிவுப்படுத்தினார்.
ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தவதற்கு ஜனாதிபதி அதிக கவனம் செலுத்தியுள்ளார். வகுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களை செயற்படுத்த உலக சுகாதார தாபனமும், உலக வங்கியும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment