ரூபவாஹினியில் கல்வி சேவைக்கு 20 சனல்கள், தரம் 01 முதல் 13 வரை தனித்தனி சனல்கள் இயங்கும் - அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

ரூபவாஹினியில் கல்வி சேவைக்கு 20 சனல்கள், தரம் 01 முதல் 13 வரை தனித்தனி சனல்கள் இயங்கும் - அமைச்சர் கெஹெலிய

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் கல்விச் சேவைக்கென 20 தனித்தனி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ், தரம் 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை 13 சனல்களும் பிரிவெனா கல்விக்காக இரண்டு தனித்தனி சனல்களும் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குண்டசாலை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற சமுர்த்தி உதவி பெரும் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் வைபவத்தில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய தொற்றுநோய் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர வாய்ப்புள்ளது எனவும் குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்க அனுமதிக்காமல் அதில் உச்சக்கட்ட அவதானம் செலுத்துவது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு என்றும் தெரிவித்த அமைச்சர் கல்வியின் சரிவு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பின் சரிவு எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். 

குண்டசாலை பிரதேசத்தில் உள்ள 185 குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. 

சமுர்த்தி சௌபாக்கிய திட்டத்திற்கு இணையாக உயர் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இரண்டு வருட காலத்திற்கு ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 1500 விகிதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

அதன்படி, உரிய மாணவர்களுக்கு 10 மாதங்களுக்காக ரூ 15,000 நிதி உதவியாக வழங்கப்பட்டது. குறித்த உதவித் தொகை திட்டத்திற்கு 27,75,000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment