இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான செஸ்னா 150 வகை (Cessna 150) வகை விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்தாக, இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 10.22 மணியளவில் இலங்கை விமானப்படையின், திருகோணமலை, சீனக்குடா பயிற்சி முகாமிலிருந்து பயிற்சிக்காகச் சென்ற குறித்த விமானம், நிலாவெளி கடற்கரைக்கு வடக்கே உள்ள இரக்கண்டி பகுதியில் முற்பகல் 10.48 மணியளவில் இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானிகளின் அடிப்படை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் குறித்த செஸ்னா 150 விமானத்திற்கோ, அதில் பயணித்த எவருக்கும் எவ்வித ஆபத்துகளுமின்றி தரையிறக்கப்பட்டுள்ளதாக, விமானப் படை அறிவித்துள்ளது.
அதிலிருந்த விமானிகளின் திறமை காரணமாக, ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, விமானப் படை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment