மீன் ஏற்றுமதியாளர்கள் போன்று நடித்து நான்கு கிலோ கஞ்சாவை மிகவும் சூட்சுமமாக மறைத்து எடுத்து சென்ற இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மீன் வாகனத்தில் இவ்வாறு கஞ்சா பொதி எடுத்து செல்லப்படுவது தொடர்பில் கிளிநொச்சி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக சோதனை மேற்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த வாகனத்தை ஆனையிறவு சோதனைச் சாவடியில் விசேட அதிரடிப் படையினர் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 4200 கிராம் கஞ்சா பொதியை மீட்டனர்.
குறித்த சம்பவத்துடன் கடத்தலுடன் தொடர்புடைய வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், வாகனத்தையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment