வியாபாரிகளின் கோரிக்கைகக்கு அனுமதி வழங்ககூடாது : அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

வியாபாரிகளின் கோரிக்கைகக்கு அனுமதி வழங்ககூடாது : அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்ககூடாது. அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக முறையான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டினார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்குமாறு வியாபாரிகள் நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பால்மா கோழியிறைச்சி ஆகிய உணவு பொருட்களின் விலையினையும், சீமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையினையும் அதிகரிக்குமாறு வியாபாரிகள் மற்றும் நிறுவனத்தினர்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, இறக்குமதி செலவு, சர்வதேச சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, இறக்குமதி மற்றும் விநியோக செலவு ஆகிய காரணிகளை முன்வைத்து விலையேற்றத்திற்கான கோரிக்கையினை வியாபாரிகள் முன்வைத்துள்ளார்கள். இவர்களின் கோரிக்கை குறித்து நுகர்வோர் அதிகார சபை இதுவரை எவ்வித தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரித்தால் பொதுமக்கள் மேலும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள். ஆகவே வியாபாரிகளின் கோரிக்கைகக்கு அனுமதி வழங்ககூடாது என நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அங்காடி விற்பனை முறைமை ஊடாக அத்தியாவசிய பொருட்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன. வழமைக்கு மாறாக அதிக விலையில் வியாபாரிகள் பொருட்களையும், உணவு பொதிகளையும் விற்பனை செய்கிறார்கள். இவ்விடயம் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment