நாட்டின் அபிவிருத்தியில் வவுனியா பல்கலைக்கழகம் தமது பங்களிப்பினை வழங்கும் - முதல்வர் ரி.மங்களேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

நாட்டின் அபிவிருத்தியில் வவுனியா பல்கலைக்கழகம் தமது பங்களிப்பினை வழங்கும் - முதல்வர் ரி.மங்களேஸ்வரன்

இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வட மாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் வவுனியா பல்கலைகழகம் தமது பங்களிப்பினை வழங்கும் என யாழ். பல்கலைகழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகம் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ள விடயம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாள். எதிர்வரும் 8ஆம் மாதத்தில் இருந்து வவுனியா வளாகமானது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா வளாகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைகழகமாக ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. அதனை பல்கலைகழகமாக தரமுயர்த்துவதற்கான செயற்பாடு நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. 

இந்த கோரிக்கையானது வவுனியா வளாக சமூகத்தினராலும், வன்னிப் பிரதேச மக்களினாலும் அரசியல்வாதிகளாலும் நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இது அரச வர்தத்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது வவுனியா வளாக சமூகத்திற்கும் வன்னிப் பிரதேச மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான, நிகழ்வாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் அதனை தரமுயர்த்துவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பினை செய்தவர்களிற்கு நாங்கள் நன்றி கடமைப்பட்டவர்கள். அவர்களிற்கு வளாக சமூகத்தினது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு வன்னிப் பிரதேச மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்,

இது தொடர்பாக வன்னியில் உள்ள அரசியல்வாதிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எமது நோக்கத்தை நிறைவு செய்வதற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அத்துடன் ஊடகத்துறையினரும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தியிருந்தனர். அவர்களிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வட மாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் கல்வி பொருளாதாரம், கலாசாரம் மென்மேலும் அபிவிருத்தி செய்வதை நோக்கமாக் கொண்டு இந்தப் பிரதேசத்திற்கு பொருத்தமான கல்வியினையும் புதிய புதிய தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடிய கல்வியினை, வழங்கக் கூடிய கற்கை நெறிகளையும் புதிய பீடங்களை ஆரம்பிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

விரைவில் மருத்துவத்துறை சார்ந்த கல்வியினையும் வழங்குவதற்கு நாம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். நீண்ட கால கனவை நிறைவு செய்வதற்காக தோளோடு தோள்நின்று மக்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment