பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை அபே ஜனபல கட்சி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துரலியே ரதன தேரர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் ஆறு மாத காலத்தை ஜூலை மாதம் 5ஆம் திகதி நிறைவு செய்கிறார். அதனையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததும் ஞானசார தேரர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுவார் என பொதுபல சேனா அமைப்பின் ஊடக இணைப்பாளர் எரந்த கேநவரத்ன தெரிவித்தார்.
அபே ஜனபல கட்சியின் பொதுச் செயலாளர் வெடினிகம விமலரதன தேரர் அதுரலியே ரதன தேரரை கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது மூன்று மாத காலத்துக்கு பதவியில் இருக்குமாறு வேண்டப்பட்டிருந்தார்.
2021 ஜனவரி 5ஆம் திகதி அவர் நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்களின் பின்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அதுரலியே ரதன தேரர் ஞானசார தேரருக்கு வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தார். உறுதியுமளித்திருந்தார்.
என்றாலும் ரதன தேரர் 6 மாதங்கள் பதவியிலிருந்தாலும் பிரச்சினையில்லை என ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே அதுரலியே ரதன தேரர் தொடர்ந்தும் பதவியிருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் அபே ஜனபல கட்சி மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்றிருந்தது. அத்துரலியே ரதன தேரர் பொதுத் தேர்தலில் அக்கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அவர் கடந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
அபே ஜனபல கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்ததும் அவ் வெற்றிடத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்படவுள்ளார் என்பதை கட்சியின் செயலாளர் வெடினிகம விமலரதன தேரர் உறுதி செய்தார்.
தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதற்குத் தயாராக இல்லை என அபே ஜனபல கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், ‘நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. அது பொய்யான செய்தியாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் 6 மாத காலத்தில் விலகுவதாக நான் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை. தொடர்ந்தும் எனது முழுமையான பதவிக் காலத்தை வகிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Vidivelli
No comments:
Post a Comment