கொவிட்19 தொற்று காரணமாக முஸ்லிம்களின் இறப்பு வீதம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. தினமும் கபுறுகளைத் தோண்டி ஜனாஸாக்களை அடக்குவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டிய கவலையான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னரான பயணத்தடை அமுலில் இருக்கும் காலத்தில் இப்போது வரை இந்நிலைமை அதிகரித்துள்ளமையை ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு எடுத்துவரப்படும் ஜனாஸாக்கள் உறுதி செய்கின்றன என ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி - மஜ்மா நகர் விஷேட மையவாடியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் குறித்து அவரை தொடர்பு கொண்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
‘இங்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்படும் ஜனாஸாக்களில் தொடர்ந்து அதிகரிப்பினைக் காணமுடிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் நாட்டின் பல பகுதிகளிலிருந்து 23 ஜனாஸாக்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டன. வியாழக்கிழமை (10) மாலை வரை 539 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன. தொடர்ந்தும் பல ஜனாஸாக்கள் எடுத்துவரப்படவுள்ளன.
முஸ்லிம் சமூகத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றமை கவலையான விடயமாகும். எமது சமூகம் கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றாமையே இதற்குக் காரணமாகும்.
இந்நிலைமை தொடர்ந்தால் முஸ்லிம் சமூகமே கொவிட்-19 தொற்றினைப் பரப்பியதாக ஏனைய சமூகத்தினர் குற்றம் சுமத்தலாம். எனவே நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
தினமும் கபுறுகளைத் தோண்டி நாம் தயாராக இருக்க வேண்டிய கவலையான நிலைமை ஏற்பட்டுள்ளது. மஜ்மா நகர் விஷேட மையவாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாற்றிடமாக வாகனேரி பிரதேசத்தில் சாப்பமடு என்ற கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணியை நாம் சிபாரிசு செய்துள்ளோம். இக்காணி தற்போதைய மஜ்மா நகர் மையவாடியிலிருந்து 300 மீற்றர் தூரத்துக்கு அப்பாலே உள்ளது.
இதேவேளை ஓட்டமாவடியில் சில பிரதேசங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 280 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. மாஞ்சோலை, மீராவோடை மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொவிட் செயலணி மற்றும் சுகாதார பிரிவினரின் ஆலோசனையையும் அனுமதியையும் கோரியுள்ளோம்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் இராணுவ பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவு அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment