புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீளத் திறக்க அறிவுறுத்தல் கடிதம் : திறப்பிற்கு எதிராக புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் வழக்கு தாக்கல் செய்ய திட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீளத் திறக்க அறிவுறுத்தல் கடிதம் : திறப்பிற்கு எதிராக புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் வழக்கு தாக்கல் செய்ய திட்டம்

கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான அறிவுறுத்தல் கடிதம் ஒன்று புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மனிதவள முகாமையாளருக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அல்லது தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பரிசோதனையில் கொவிட் தொற்று அறியப்படாதவர்களைக் கொண்டு ஆடைத் தொழிற்சாலையை மீள இயக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடுகையில், ஆடைத் தொழிற்சாலை வாயிலில் போதிய கை கழுவும் வசதி செய்து தரப்படுவதுடன், எல்லோரும் சரியான முறையில் கை கழுவுவதை உறுதிப்படுத்துதல். சுயதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ அல்லது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்திலிருந்தோ தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

சகல ஊழியர்களும் COVID-19 தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்தவும். அதிக நோய்த் தொற்றுள்ள பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சம்பந்தமான தகவல்களை தங்கள் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உடன் அறியத்தர வேண்டும்.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் தங்கள் உத்தியோகத்தர்களுக்கு எழுமாறான பி.சி.ஆர் செய்யப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஊழியர்கள் வேலை செய்யும் வேலைத்தளத்தின் கண்காணிப்பு கமரா பதிவுகளைத் தேவைப்படும் போது சுகாதார வைத்திய அதிகாரி உத்யோகத்தர்கள் பார்வையிட ஒழுங்கு செய்யப்படவேண்டும்.

கொவிட் பாதுகாப்பு சுகாதார நடைமுறை சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினர், புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பிற்கு வழக்கு ஒன்று தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சண்முகம் தவசீலன்

No comments:

Post a Comment