இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர வேண்டாம் : அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர வேண்டாம் : அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் கோரிக்கை

காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச்.ஆர்.இ.எஸ். 413 என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவரான பிரதிநிதி கிரெகரி மீக்ஸ் (ஜனநாயகக் கட்சி / நியூயோர்க்) மற்றும் தரவரிசை உறுப்பினரான பிரதிநிதி மைக்கேல் மெக்கவுல் (குடியரசுக் கட்சி / டெக்சாஸ்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடலில், தவறான, பக்கச்சார்பான மற்றும் ஆதாரமற்ற வகையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ளதும், தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதுமான இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது' என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தீர்மானத்தின் பாரபட்சமற்ற தன்மையை ஒவ்வொரு பந்தியிலும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் இந்தத் தொடர்பாடல் அமைந்திருந்தது.

1997ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மற்றும் 2008ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ யால் 'உலகின் மிக ஆபத்தான மற்றும் கொடிய தீவிரவாதிகளின் மத்தியிலான' ஒரு 'சுதந்திர ஆயுத அமைப்பாக' பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை சமப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, அதன் தோற்றம் மற்றும் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்மானமானது, 'பாரம்பரிய தமிழ் தாயகங்கள்' பற்றிய குறிப்புக்களின் மூலமாக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அதேவேளை, இலங்கையின் அரசுக்கான தன்மையையும்கூட கேள்விக்குள்ளாக்குகின்றது. 

இது நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பதுடன் மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் இறுதி இலக்கான இலங்கையை சிதைக்கும் நோக்கத்தை ஆதரிப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக் கவலைகள் பற்றிய தீர்மானத்தின் அறியாமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள அதன் பல முன்னணி அமைப்புக்களின் கூர்மையான கூறுகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் உட்பட இலங்கையின் நிலையானதொரு பாதுகாப்புப் பங்காளியாக' அமெரிக்கா விளங்குவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், 'ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் முழுவதும், குறித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைக்கு மாறுபட்டதாக உள்ள இந்தத் தீர்மானம், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக ஆயுதமேந்திய செயல்களை சபை ஆதரிக்கின்றது என்ற தவறான முடிவுக்கு வழிவகுக்கும். 

இது ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றியிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் சொந்த வெளியுறவுக் கொள்கையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளை, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை எதிர்மறையாகப் பாதிக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடிய இலங்கை அரசாங்கம், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, விடுவிப்பதற்காக இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மே 2009 இல் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, அபிவிருத்தி செய்யவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மறுவாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட 596 சிறுவர் படையினரைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட பலருக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புக்களையும் இந்தத் தொடர்பாடல் கோடிட்டுக் காட்டியது.

மோதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மக்களின் உரிமைகளையும், ஜனநாயக சுதந்திரங்களையும் உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டில் வட மாகாண சபைத்தேர்தல் நடாத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. 

2017 முதல், ஒருபோதும் நிறைவேற்றப்படாத மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு தீர்ப்பின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தல்களை ஒத்திவைப்பதை ஆதரித்தன. 

ஏறக்குறைய 3 ஆண்டுகளாக, மனித உரிமைகள் சபை அல்லது மேற்கத்தேய நாடுகள், வட மாகாணம் உட்பட மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடைவது குறித்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றக் குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வரும் ஒரு நேரத்தில், இது ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் புலனாய்வு ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை உட்பட இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கைகள், 'மேசையளவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட' தகவல்கள், நிகழ்வுகள் பற்றிய வெறும் வெளிப்படை நிலையான விவரிப்பாகவே அமைவதுடன், இந்த ஆவணங்கள் ஆதாரங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. 

மாறாக, ஏனையவற்றுக்கு இடையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, 'பரணகம ஆணைக்குழு', ஐ.நா. மற்றும் யு.என்.டி.பி, யுனிசெப் மற்றும் ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபு நேஸ்பி வழங்கிய தகவல்கள் ஆகிய சரிபார்க்கப்பட்ட பல சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 

சர்வதேச சட்டவியலாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்கள், மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் இராணுவ இணைப்பாளரான கேர்னல் அன்டன் காஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்னல் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோரின் அறிக்கைகள் இந்த விவரிப்புக்கு சவால் விடுக்கின்றன.

அக்டோபர் 2015 இல் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி, அரசியலமைப்பிற்கு முரணான வகையிலான வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை ஆரம்பிக்கும் என்ற உறுதிப்பாட்டை முந்தைய அரசாங்கம் வழங்கியிருந்த போதும், 5 ஆண்டுகளாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தத் தீர்மானத்தின் ஏனைய ஆதரவாளர்கள் அந்த வாக்குறுதிகளை முந்தைய அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை எந்த வகையிலும் கொடுக்கவில்லை.

எழுப்பப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் நம்பகமான, வெளிப்படையான உள்நாட்டு செயன்முறையை வழங்கும் வகையில், ஜனவரி 2021 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, அதன் மூலம் 2021 மார்ச் 04ஆந் திகதி 'விசாரணை செய்வதற்காக எழுதப்பட்ட பிரதிநிதித்துவங்கள் அல்லது தகவல்கள் அல்லது மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு பொருளையும் சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு நபர், நபர்கள் அல்லது அமைப்புக்களும் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதற்காக அழைப்பு விடுக்கப்பட் டுள்ள' இந்த நேரத்தில் ஒரு 'சர்வதேசப் பொறிமுறையை' கோருவது மிகவும் மோசமானது. ஆணைக்குழு ஏப்ரல் முதல் விசாரணைகளை நடாத்தி வருவதுடன், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment