(நா.தனுஜா)
சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்தமைக்காக எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அதற்கென பிரத்யேகமாக இரு சட்டத்தரணிகளை நியமித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை காணொளியொன்றை வெளியிட்டு அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது நாட்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் விதமான நடவடிக்கைகளைத் தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்யும் நபர்களை, பொய்யான செய்திகளைப் பகிர்ந்ததாகக்கூறி கைது செய்வதற்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுசென்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்றவாறான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. இது சட்டத்திற்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும்.
பொதுமக்களுக்கான கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது அரசியலமைப்பில் அடிப்படை உரிமை என்றவாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் நோக்கில் அந்த அரசியலமைப்பிற்கும் அப்பாற்பட்ட செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபடுகின்றது.
எனவே சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை வெளியிட்டமைக்காக எவரேனும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்களானால் அவர்கள் சார்பில் செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது.
அவ்வாறு கைது செய்யப்படக்கூடியவர்களுக்கு இலவச சட்ட உதவியைப் பெற்றுக் கொடுப்பதற்கென யசஸ்.டி.சில்வா, நவீன் சானக ஆகிய இரண்டு சட்டத்தரணிகளை நியமித்திருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மனித உரிமைகளையும் தகவல் அறியும் உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்.
No comments:
Post a Comment