(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், தீ பரவலுக்கு உள்ளான விவகாரத்தை மையப்படுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் விவகாரம் காரணமாக பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையிலான கடற் பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடு செலுத்த அரசாங்கத்துக்கு உத்தர்விட வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்டத்தரணி மஞ்சுள பால சூரிய ஊடாக, மனித உரிமைக்ள் செயற்பாட்டாளரான அருட் தந்தை சரத் இத்தமல்கொட, மீனவர்களான டப்ளியூ. காமினி பெர்ணான்டோ, வர்ணகுலசூரிய கிறிதோபர் சரத் பெர்ணான்டோ ஆகியோரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மீன் பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, துறைமுக அதிகார சபை தலைவர், சுற்ராடல் அமைச்சின் செயலர் வைத்தியர் அனில் ஜாசிங்க, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள் நாட்டு பிரதிநிதி சீ கன்சோர்டியம் தனியார் நிறுவனம், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சட்ட மா அதிபர் உள்ளிட்ட 12 பேர் பிரதிவாதிகளாக இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment