20 ஆயிரம் பொலிஸார் கடமையில், வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள், வெளி பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

20 ஆயிரம் பொலிஸார் கடமையில், வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள், வெளி பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடு தழுவிய ரீதியில் இன்று புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு கடந்த 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் இரு தினங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றுள் பெரும்பாலானவை மாகாண எல்லை பகுதிகளை இலக்கு வைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை மாத்திரமே இயங்கும். இதன்போது, அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஏனையவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

மேலும் பொது போக்குவரத்து சேவைகள் இயங்காது, வர்த்தக நிலையங்களும் திறக்கப்படமாட்டாது. இந்நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளி பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

இதேவேளை, பொசன் போயா விடுமுறை தினமான நாளையதினம் மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபட முடியும். இதன்போது மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார்.

No comments:

Post a Comment