எங்களின் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்ப்போம் : வெளிச்சக்திகளே தமிழ் மக்களை குழப்புகிறது - கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

எங்களின் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்ப்போம் : வெளிச்சக்திகளே தமிழ் மக்களை குழப்புகிறது - கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர்

நூருல் ஹுதா உமர்

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் தமிழ் முஸ்லிம் உறவை சங்கடப்படுத்தி சகோதரத்துவத்தை சீரழிப்பது போன்று பொய்யான நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். இப்படியான ஒரு அநியாயமிக்க காரணியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் இருக்கக்கூடாது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எல்லா சமூகத்தினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு யாருக்கும் அநீதி இடம்பெறாத வகையில் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்படும் என கல்முனை மாநகர பிரதி முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமுகமாக கல்முனை கட்சி காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், வெளி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையின் அளவு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எமது பிரச்சினையை இங்கு இருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி தீர்வை பெறலாம் என்பதை உறுதியாக நம்புகிறேன். 

தமிழருக்கும் முஸ்லிங்களுக்குமான உறவு காலாகாலமாக நீடித்து வருவது. தலைவர் அஸ்ரபுக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் நெருங்கிய உறவு இருந்தது. எமது பிரச்சினைகளை தீர்க்க இன ரீதியாக, அரசியல் ரீதியாக சிந்திக்காமல் நியாயபூர்வமாக சிந்திக்க வேண்டும். 

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மஹேந்திரன் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஆளுமையான ஒருவர். அவர் கல்முனை விடயத்தில் மு.கா பிரதித் தலைவர் ஹரீஸ் எம்.பியை தொடர்புபடுத்தி பேசுவதை விடுத்து நியாயத்தை சிந்திக்க வேண்டும். எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு நிர்வாகத்தை சரியாக வகைப்படுத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளுமில்லை.

தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக பயணித்து நாம் பிட்டும் தேங்காய் பூவும் போன்று வாழ்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். எதிர்வரும் நான்காம் திகதிய கூட்டத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், மு.கா பிரதித் தலைவர் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு இது தொடர்பில் பேசுவார்கள். 

யாருக்கும் அநியாயம் நடக்க கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இந்த விடயத்தில் வெளி சக்திகளே கல்முனை தமிழ் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறது என்றார். 

இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். பைரூஸ், ஏ.அமீர், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எஸ்.எம். நிஸார், ஏ.எம். நவாஸ் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment